ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

அரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள்



அரசு முன்வைத்திருக்கும் லோக்பால் சட்டத்தில் பல்வேறு ஓட்டைகள் இருப்பதாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.   பெரும் பதவிகளில் அமர்ந்து கொண்டு ஊழலுக்குத் துணை செல்கிறவர்கள் மற்றும் ஊழல்களில் ஈடுபடும் மஹானுபாவர்களை ரட்சிக்கின்ற விதமாகத்தான் அரசு முன்வைத்திருக்கும் சட்ட வரைவில் பல விஷயங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

இவற்றுக்கு மாற்றாக அன்னா ஹஸாரே முன்வைத்திருக்கும் ஜன் லோக்பால் மசோதாவின் வரைவில், ஊழலுக்கு எதிரான இந்த அமைப்பு தேர்தல் கமிஷன் போல சுதந்திரமாக இயங்கும்  அமைப்பாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.

ஏறத்தாழ இப்போது தமிழ்நாட்டுத் தேர்தல்களின் போது  பலருடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட தேர்தல் கமிஷன் போல என்று சொல்ல வருகிறார் அன்னா என்று நினைக்கிறேன்.  இந்த வயதில் என்ன கெட்ட எண்ணம் பாருங்கள் அந்தக் கிழவருக்கு.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள் மற்றும் மேல்நிலை அரசு அதிகாரிகள் போன்றவர்கள் ஊழலில்  ஈடுபட்டால் அவர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை பொதுமக்கள் தாக்கல் செய்யும் அதிகாரம் மற்றும் பொதுமக்களின் முறையீட்டின் பெயரில் குற்றம் நிரூபிக்கப்பட்ட மஹானுபாவர்களை இந்த லோக்பால் அமைப்பு சட்டப்படி தண்டிக்கவும் அன்னாவின்  ஜன்லோக்பால் வரைவு பரிந்துரைக்கிறது.   அரசு வற்புறுத்துவது போல, வெறும் ஆலோசனைகளைப் பரிந்துரைக்கும் அமைப்பாக மட்டும் அல்லாது ஊழல்களுக்கு எதிரான முறையீடுகளை பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தையும் இந்த ஜன்லோக்பால் அமைப்புக்கு வழங்க வேண்டும் என்கிறார் அன்னா.
 

அன்னா பரிந்துரைக்கும் லோக்பால் அமைப்புக்கும்  அன்னை சோனியா மற்றும் ஆற்றல்மிகு மன்மோகன் சிங் முன்வைக்கும் வரைவுக்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கின்றன என்றார் ஒரு நண்பர்.

வெளி உறவு தொடர்பான செயல்பாடுகள், உள்துறை பாதுகாப்பு மற்றும் ராணுவப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பிரதமரை ஏதும் கேள்விகள் கேட்க முடியாது என்கிறது சோனியா அருளிச் செய்ய விரும்பும் லோக்பால். 

(யோவ் தேவை இல்லாம இந்த நேரத்துலே  ஏன்யா போஃபோர்ஸ் பத்திப்  பேச முயற்சி பண்றே... அதைப் பத்தி அப்புறம் வரலாம் என்கிறார் நண்பர். சரி இருப்போம்).

அன்னா முன்வைக்கும் வரைவில் உள்துறை பாதுகாப்பு, ராணுவம், அயல்நாட்டு உறவுகள் என எதையும் விட்டு வைக்க வில்லை.
எல்லாவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்.   அது சரி.  நாளை போஃபோர்ஸ் சாயலில்  வேறு ஏதாவது கிளம்ப வாய்ப்பு இருக்கிறதே அப்போது நம் தலைவர்கள் என்ன செய்வார்கள்  என்று கொஞ்சமாவது யோசித்துப் பார்க்கிறாரா இந்தக் கிழவர்?  தொலைநோக்குத் திட்டம் இல்லாதவர்கள் எல்லாம் சட்டம் இயற்ற முன்வந்தால் இப்படித்தான்.  என்ன செய்து தொலைப்பது?

அந்த நண்பர் இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.

அரசு முன்வைக்கும் லோக்பால் வரைவில் உள்ள வார்த்தைகள் மிகவும் கவனத்துடன்  செதுக்கப்பட்டு உள்ளனவாம்.  பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் (Security matters) என்கிற சிமிழுக்குள் எதைவேண்டுமானாலும் போட்டு அடைக்கலாமாம்.  அதாவது இந்த தேசப்பாதுகாப்பு என்னும்  சிமிழுக்குள் அடைக்கப்படும் எந்த விஷயமும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வரமுடியாது என்று அரசு முன்வைக்கும் வரைவு பரிந்து உரைக்கிறதாம். 
அரசு பரிந்துரைக்கும் இந்த வரைவு ஏற்றுக் கொள்ளப்பட்டு சென்ற ஆண்டில் இந்த லோக்பால் சட்டம் நடை முறைக்கு வந்திருந்தால் ஜெகம்புகழும் 1.78 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலை எந்த நிறுவனமும் விசாரித்து இருக்க வாய்ப்பு இல்லை.  தேசப் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் என்ற மந்திரச் சிமிழில் இந்த ஊழல் அடைக்கப்பட்டு இருக்குமே.

(இப்போது வருந்தி என்ன பயன்?  ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் இல்லையா?  அடுத்து ஏதாவது பெரிசா பண்றப்போ இதையெல்லாம் ஜாக்கிரதையா பார்த்துக்கச் சொல்லுங்கோ என்கிறார் பிர்லா மந்திர் வாசலில் அமர்ந்து இருக்கும் பெரியவர் ஒருவர்).

அதேபோல, அரசு முன்வைக்கும் சட்டத்தில்  பரிந்துரைக்கும் தண்டனை விஷயத்திலும் முரண்பாடுகள் இருக்கின்றன என்கிறார்கள்.  சோனியா என்ன
இருந்தாலும் தாயார் அல்லவா?  தயாளு அல்லவா?  (இது இந்தி வார்த்தை.  எனவே தேவையில்லாமல் யாரும் சண்டைக்கு வரக்கூடாது).  எனவே ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஜாம்பவான்களுக்கு அவரவர் குற்றங்களுக்கு ஏற்ப ஆறு மாதத்தில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.   என்று பரிந்துரைத்து இருக்கிறார்கள் என்றார் நண்பர்.

இந்தக் குசும்பு பிடித்த அன்னா என்ன சொல்கிறார் என்றால் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அரசுக்கு நஷ்டமான தொகையை குற்றம் நிரூபிக்கப்பட்டவரிடம்   இருந்தே அரசு வசூலிக்க வேண்டும் என்கிறார்.  உதாரணத்துக்கு அன்னா சொல்வது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இப்போது ஆ.இராசா குற்றம் புரிந்தவர் என்பது நிரூபணம் ஆனால் அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்ய வேண்டியிருக்கும்.

அன்னா தாத்தா விவஸ்தை இல்லாமல் பாயைப் பிறாண்ட முயற்சிக்கிறார்.  அன்னை சோனியாவுக்கும் ஆற்றல் மிகு  மன்மோகன்ஜிக்கும் ஏதாவது பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? 

அப்புறம் முக்கியமான விஷயம் ஒன்றை சொன்னார் நண்பர்.  அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டத்தில்  யாராவது குடிமகன் (நல்ல அர்த்தத்தில்தான் எடுத்துக் கொள்ளுங்களேன்) பெரிய மனிதர்களைப் பற்றி முறையீடு செய்தால், அந்தக் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், அல்லது அந்த முறையீடு பொய்யானது என்று நிரூபிக்கப்பட்டால் அந்த முறையீடு செய்தவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உண்மையாகவே யாருக்காவது ஏதாவது முறையீடுகள் இருந்தால், அரசியல் ரீதியாக பலம் படைத்தவர்கள் மீது ஏதாவது முறையீடு செய்ய வேண்டும் என்றால் அதை நிரூபிக்க வேண்டிய கட்டாயமும் முறையீடு செய்தவர்கள் தலையிலேயே விடியும்.  இல்லை என்றால், ஏதாவது முறையீடு செய்து விட்டு அது நிரூபிக்கப்பட்டால் திருப்பதிக்கோ பழனிக்கோ குடும்பத்துடன் மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று சம்பந்தப்பட்ட நபர் கடவுளுக்கு லஞ்சமாக எதையாவது கொடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். 


இதுபோன்ற தர்மசங்கடமான  சிக்கல்கள் எல்லாம் அன்னா பரிந்துரைக்கும் ஜன்லோக்பால் மசோதாவில் இல்லை என்கிறார்கள்.
அன்னா பரிந்துரைக்கும் மசோதாவிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.  அவை விவாதத்துக்கும் பரிசீலனைக்கும் முன்வைக்கப்படும் போது ஒவ்வொன்றாக வெளியில் வருவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன என்கிறார்கள்.

அன்னா ஹஸாரே லோக்பால் மசோதா பற்றிப் பேசுவது எல்லாம் சரி.  கொஞ்சம் நன்றாகத்தான்இருக்கிறது.  ஆனால், க்வார்ட்டரோச்சி அண்ணாச்சியை அழகாகக் கையை வீசிக்கொண்டு செல்வதற்கு வழிவகை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சோனியா அம்மையாரும் மன்மோகன் சிங் போன்றவர்கள் ஊழலுக்கு எதிரான மிகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துவதே தங்கள் லட்சியம் என்று சொல்லி வருவது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று டெல்லியில் அங்கங்கு கலாய்க்கிறார்கள்.

இதைவிட, டெல்லியில் செல்லமாக அமுல் பேபி என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இடத்துப் பிள்ளையும் தன் பங்குக்கு இப்போது ஊழலை எதிர்க்கும் வகையில் மிகவும் கடுமையான சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதில் எவ்விதத் தயக்கமும் காட்ட மாட்டோம் என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.  அவருடைய  கொள்ளுத்தாத்தா, பாட்டி, அப்பா என்று பெரும் பாரம்பரியம் மிக்க முன்னோர்களும் இதையேதான் பல்லாண்டுகளாக சொல்லி விட்டுச் சென்றார்கள்.  இந்தப் பேரப்பிள்ளை உண்மையிலேயே ஊழலுக்கு எதிரான ஒரு கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினால் அவருடைய கட்சியின் ஆதரவில் வெளியிட்டுள்ள,   தொளதொளவென்று சகல இடங்களிலும் பிய்ந்து பரிதாபமாகத் தொங்கும் வலுவற்ற ஒரு லோக்பால் மசாதாவை ஏன் இவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.

லோக்பால் அமைப்புக்கான சட்டம் என்பதே ஒரு கேலிக்கூத்தான விளையாட்டு என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.  இந்திய மக்களுக்குத் தேவை சட்டம் அல்ல.  அதிகாரம் மற்றும் அவை சார்ந்த ஊழல்களுக்கும் முறைகேடுகளுக்கும் எதிராக செயல்படும் மனத்திண்மை மட்டுமே என்கிறார்கள்.

அன்னா ஹஸாரே பரிந்துரைத்த குழுவினரில் சிலர் மீதே வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன.  தீவிரமான விவாதத்துக்கு ஆளாகி வருகின்றன.

ஆனாலும் அன்னா ஹஸாரே சொல்லும் விஷயங்கள் தவறானவை என்று நம்மில் யாராலும் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன்.
குறிப்பாக இன்றைய சூழலில் அப்படிச் சொல்லக் கூடாது என்றும் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை: