ஆதரவாளர்கள்

புதன், 14 ஆகஸ்ட், 2013

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்ற

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் ஆனாலும் அதிகாரிகளின் துணையில்லாமல் ஊழல் நடைபெற இயலாது என்பதற்கு இது ஒரு சாட்சியம்
பதிவு செய்த நாள் -
ஆகஸ்ட் 14, 2013  at   1:54:20 PM
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம் புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணல்.
நெறியாளர் (ஜென்ராம்):வணக்கம்
தேவசகாயம்:வணக்கம்.
நெறியாளர்:இந்த வார செய்திகளை பார்க்கும் போது நேர்மையான அதிகாரிகள் என்றால் தங்கள் பணி காலங்களில் (சர்வீஸ்) பணி யிடை நீக்கம் (சஸ்பென்ட்) சந்திக்க வேண்டும் நிலை நேருகிறது. இந்த நிலையை நீங்கள் சந்தித்துள்ளீர்களா..?
தேவசகாயம்: இந்த அவல நிலை 1975 க்கு பிறகு தான் மோசமாக உள்ளது. எனக்கே இது நேர்ந்துள்ளது. சண்டிகர் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது, நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் நடவடிக்கை எடுக்கும் போது, எனக்கு எதிராக விசாரணை அறிக்கை தயார் செய்தார்கள். ஐஏஎஸ்-ல் ஒரு விதி இருக்கிறது. ஒருவரை இடைநீக்கம் செய்யும் முன் அவருக்கு விளக்க கடிதம் அனுப்ப வேண்டும். முக்கியமாக, பணியில் இருந்து நீக்கக்கூடிய அளவில் பிரச்னை இருந்தால் மட்டுமே இடைநீக்கம் செய்ய முடியும். அப்போது என்னிடம் விதிமுறை பின்பற்றினார்கள். இதனால் எனக்கு எதிராக அரசியல் அழுத்தம் இருந்தாலும், இடைநீக்கம் செய்ய முடியவில்லை.
நெறியாளர்: அதிகாரத்தில் உள்ளவர்கள் ,அரசியல்வாதிகள், எதிராக செயல்படும் போது, ஐஏஎஸ் அதிகாரிகள் எப்படி எதிர்கொள்வது.?
தேவசகாயம்: நிர்வாகம் செய்வதற்கு விதிகள் இருக்கிறது. அதன்படி தான் ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஆனால், அரசியல் வாதிகளுக்கு விதிகள் கிடையாது.
நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கும் போது, குடிமையியல் பணிகள் தொடர்பாக சர்தார் வல்லபாய் படேல் , அரசியல் சார்பற்ற அமைப்பை உருவாக்க ஆலோசனை கொடுத்தார். இதை கொண்டுவந்தால் தான் நாட்டை வழி நடத்த முடியும் என்றார். இதனை ஜவஹர்லால் நேரு ஏற்றுக்கொள்ளவில்லை...
நெறியாளர்: நீங்கள் சொல்வது போது, ஐஏஎஸ், ஐபிஎஸ் சர்வீசை உருவாக்க நடந்த போராட்டத்தை இன்றுள்ள அதிகாரிகள் உணர்ந்துள்ளார்களா..? அதை காப்பா ற்ற வேண்டும் என்று நேர்மையாக செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், இடைநீக்கம் இல்லாமல் செயல்பட வழி இல்லையா..?
தேவசகாயம்: ஆரம்பத்தில் இருந்த அதிகாரிகள் உணர்ந்தார்கள். 1975 க்கு அப்புறம் நெருக்கடி நிலைக்கு பிறகு, நிலை மாறி விட்டது.
ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. ஆனாலும், எங்கள் காலத்தை விட தற்போது உள்ள தேர்வு முறைகள் சரியில்லாமல் இருக்கிறது.
இதனால், அரசியலமைப்பை காப்பாற்ற துணிவு குறைந்து வருகிறது.
நெறியாளர்: ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம், 20 ஆண்டில் 200 ஐஏஎஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது... இது அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையிலான முரண்பாட்டால் நிகழ்கிறதா..?
தேவசகாயம்: எல்லா இடைநீக்கமும் அரசியல் காரணங்களால் நிகழ்வதில்லை. அதிகாரி தவறு செய்திருந்தால், 45 நாட்கள் வரை இடைநீக்கம் செய்ய முதலமைச்சர்களுக்கு அதிகாரம் உண்டு. இடைநீக்கம் தொடர்பாக மத்திய அரசிடம் அறிக்கை தர வேண்டும். அதுபற்றி எல்லாம் எதுவும் கடைப்பிடிக்காமல் துர்கா சக்தி விவகாரத்தில் செயல்பட்டிருக்கிறார்கள்...
நெறியாளர்: துர்கா சக்தி விவகாரத்தில் எந்த வித நடைமுறையும் கடைப்பிடிக்கவில்லை என்கிறீர்கள்.. நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிற்குமா..?
தேவசகாயம்: மத்திய அரசிடமே இந்த விவகாரம் நிற்காது... உமாசங்கர் விவகாரமும் இதேப்போன்று தான்... அவரை இடைநீக்கம் செய்தார்கள் பின்னர் 45 வது நாள் மத்திய அரசு அவரை மீண்டும் பழைய பதவியில் அமர்த்தியது. அதேப்போல், உத்தர பிரதேசத்தில் துர்கா சக்தி விவகாரமும் 45 நாட்களிலேயே முடிவுக்கு வரும்...
நெறியாளர்: ... ஆனால், உமாசங்கர், சகாயம் உள்ளிட்டோர் 20 முறை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்... இதுப்போன்று இடமாற்றம் செய்யப்படுகிற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேர்மையானவர்கள் என்று சொல்ல முடியுமா..?
தேவசகாயம்: இடமாற்றம் செய்யப்படுவது அவலமானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு , மக்களுக்கு நியாயமான ஆட்சியை வழங்க வேண்டும். அதிகாரிகளை மாற்ற வேண்டும், இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால் அமைச்சரவையில் முடிவு செய்கிற மாநிலங்கள் இருக்கின்றன. அதுபோன்று பின்பற்ற வேண்டும்...
நெறியாளர்: ஐஏஎஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றால் மத்திய அரசிடம் முன்கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.....
தேவசகாயம்: அதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அதிகாரியை நீக்கம் செய்ய அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. இடைநீக்கம் என்பது இதனுடன் தொடர்புடையது என்பதால், மத்திய அரசு ஒப்பதல் பெற வேண்டும். இதை நான் வரவேற்கிறேன்.
நெறியாளர்: இந்த மாதிரி மத்திய அரசு ஒப்புதலை பெற்றே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அதிகாரிகள் மாநிலஅரசுக்கு ஒத்துழைப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் என்ன இருக்கிறது ?
தேவசகாயம்: நன்றாக படித்து , பயிற்சி பெற்று தான் அதிகாரிகள் வருகிறார்கள்.. நல்ல தலைமை பண்பை வளர்த்துக்கொள்ள பயிற்சி கொடுத்தால், நன்றாக செயல்படுவார்கள்...
நெறியாளர்: அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு 'காக்கா' பிடிக்கும் அதிகாரிகள் குறித்து...
தேவசகாயம் : இது போன்று உள்ளவர்கள் இருக்கிறார்கள்... சுயமரியாதை உள்ளவர்கள் தான் சரியாக செய்வார்கள்... சுயமரியாதை இல்லாதவர்கள் தான் ஊழல் செய்வார்கள்... அதில் தப்பிக்கவே தான் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் அடிபணிகிறார்கள்... இது எண்ணிக்கையில் குறைவு தான்..
நெறியாளர்: ஒரு தொலைபேசியில் பேசிய அடுத்த 40 நிமிடத்தில் இந்த அதிகாரிக்கு இடைநீக்கம் உத்தரவு கிடைத்திருக்கிறது... என்று உ.பி அரசியல் பிரமுகர் கூறுகிறார்.. இது ஒரு பக்கம். நான் சிகரெட் பிடித்து முடிப்பதற்குள் உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் சாம்பலாக்கிவிடுவேன் என்று கூறிய அதிகாரியையும் பார்த்திருக்கிறோம்...
தேவசகாயம் : (சிரித்துக்கொண்டே..) ஜெ.என்.தீக்‌ஷித் ( முன்னாள் வெளியுறவு செயலர்) இலங்கை விவகாரம் பற்றி பேசினால்.. அது பரிதாபத்திற்குரியது..
அது அதிகார திமிர் (arrogants of power)...
ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தார்... அவருக்கு ஒன்றுமே தெரியாது... அவரை இந்த தீக்‌ஷித் ஆட்டிப்படைத்தார்... தான் என்ன செய்தாலும், பிரதமர் ஆதரவாக இருப்பார் என்ற நினைப்பில் இருந்தார்.. இதுப்போன்ற அதிகாரிகள் மிகமிக குறைவுதான்.
நெறியாளர்: அதிகார திமிர் அதிகாரிகளிடம் குறைவு என்கிறீர்கள்...
தேவசகாயம் : விவரம் தெரியாதவர்கள், தன்னுடைய முட்டாள் தனத்தை மறைக்கவே இதுப்போன்று நடந்துக்கொள்கிறார்கள்...
நெறியாளர்: அதிகாரிகள் மக்களிடம் பதில் சொல்வது அவசியமில்லை... ஆனால் அரசியல் வாதிகளுக்கு தான் பதில் சொல் வேண்டிய அவசியம் உள்ளது.......
தேவசகாயம்: அதிகாரிகளுக்கு தான் மக்களிடம் பதில் சொல்ல வாய்ப்பு இருக்கிறது... அரசியல்வாதிகள் என்ன பதில் சொல்கிறார்கள்...
நெறியாளர்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான படிப்பு, பயிற்சி, பதவி, அதிகாரம்... இவை சாதாரண மக்களுக்கு எதிராக முடிகிறது என்று ஒரு சிலர் சொல்கிறார்கள்... அதுகுறித்து...
தேவசகாயம் : யார் இதுகுறித்து சொல்கிறார்கள் என்றால், அவர் சொல்வதை யாரும் கேட்காதபட்சத்தில் அதிகாரிகளை குறைகூறுகிறார்கள். 30 விழுக்காடு மக்கள் வாக்களித்து ஆட்சி வருகிறார்கள். 70 விழுக்காடு அவர்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். அப்படி இருக்க 30 விழுக்காடு ஆதரவு உள்ளவர்களுக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டுமா..? எல்லாருக்கும் சேவை செய்ய வேண்டாமா..?
நெறியாளர்: ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் போது, முன்னர் இருந்த ஆட்சியில் உள்ள அதிகாரிகளை மாற்றுவதும், காத்திருப்போர் பட்டியலில் வைப்பது போன்ற நடவடிக்கை குறித்து...
தேவசகாயம்: நல்ல கேள்வி. இரண்டு பக்கமும் தவறு நடக்கிறது. சுயநலம் கருதி இது போன்று செய்கிறார்கள்... அந்தக்கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள், இந்தக்கட்சிக்கு ஆதரவாக இருந்தார்கள் என்று அதிகாரிகள் பிராண்டிங் ஆகிறார்கள்..
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், உண்மையாக ஊழல் செய்கிறவர்கள் எந்த கட்சி பக்கமும் சாய்ந்துக்கொள்கிறார்கள்... நேர்மையாக இருப்பவர்கள் தான் மாட்டிக்கொள்கிறார்கள்...
நெறியாளர்: ஓர் அணியோடு சேர்த்துப்பார்ப்பதாக கூறப்படும் அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆணைகளுக்கு கட்டுப்படுவதுமட்டல்ல, அவர்களோடு, இணைந்து செயல்படுவதில் ஒரு சவுகரியம் இருப்பதாக நினைக்கலாமா..?
தேவசகாயம் : சவுகரியம் இருக்க தான் செய்கிறது. இது மிகவும் குறைவாக தான் உள்ளது. அதற்காக பிராண்டிங் செய்யக்கூடாது..
நெறியாளர்: அதிகாரிகள் சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அரசியல்வாதிகள் தலையீடே இருக்க கூடாது என்ற வாதம் குறித்து...
தேவசகாயம்: அநியாயங்களுக்கு எதிராக ஆட்சியரை/அதிகாரிகளை செயல்பட வைப்பது தான் முதலமைச்சரின் தலையாய பொறுப்பு. தலையீடு என்பது நல்ல காரியங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
நெறியாளர்: படித்த மக்கள், அரசியல் அகற்றப்பட்ட நிர்வாகம் நாட்டை முன்னேற்றும் என்கிறார்கள்.. அது குறித்து..
தேவசகாயம்: அரசியல் தலையீடு என்பது , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருக்க வேண்டும். ஆனால், கட்சிக்காரர்களுக்கு செய் என்று கட்டளையிடுவதுப்போன்ற தலையீடுகளை தவிர்த்தால் நிர்வாக நன்றாக செயல்படும்.
நெறியாளர்: கோப்புகளில் கையெழுத்து போட்டு திட்டங்களை நிறைவேற்றுவது அதிகாரிகள் தான். ஊழலில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், நீதிபதிகள் தான், அவர்களிடத்திலிருந்து ஊழலை ஒழித்தால் தான் நாடு ஊழலற்றதாகிவிடும். இதுக்குறித்து...
தேவசகாயம்: நாட்டில் நடக்கும் அவலமான ஆட்சிக்கு பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பங்கு உள்ளது. எந்தவொரு உத்தரவையும் அமைச்சர்களால் கையெழுத்திட முடியாது. அதனால், எங்கு ஊழல் நடந்தால் நடவடிக்கை எடுக்க ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு. எனவே, அதிகாரிகளுக்கு தெரியாமல் ஊழல் நடப்பதில்லை.
ஊழல் செய்பவர்களை தான் முக்கிய பொறுப்புகளில் ஆட்சியாளர்களை நியமிக்கிறார்கள். அதிகாரிகளை மிரட்டி அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
நெறியாளர்: தமிழகத்தில் இளநிலை அரசு ஊழியர்கள் ஊழல் செய்தால் அதனை விசாரிக்க அதிகாரம் உண்டு. ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகள் செய்தால் அவ்வாறு உத்தரவிட முடியாது என்கிற அரசாணை உள்ளது. இதனை திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. இதுக்குறித்து...
தேவசகாயம்: சிபிஐ விசாரணையே இன்று கேள்விக்குறியாக உள்ளது. அதற்காக தான் லோக் ஆயுக்த், லோக்பால் உருவாக்க கோரிக்கை வலுத்தது. அது தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அப்படி லோக் ஆயுக்த், லோக்பால் அமையுமானால், ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிக்க உத்தரவிட முடியாது என்கிற நிலை தேவையில்லை. அவ்வாறு அந்த அமைப்புகள் அமையாத பட்சத்தில், விசாரணை மேற்கொள்ளலாம்.
நெறியாளர்: நீங்கள் ஹரியானா மாநிலத்தில் பணியிலிருந்த போது, சிறையில் இருந்த ஜெயபிரகாஷ் நாராயண் உடன் நெருக்கமாக இருந்ததாக நீங்கள் எழுதிய நூல்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதுக்குறித்து..
தேவசகாயம்: நேர்மையாக இருக்க வேண்டும்... என்கிற என் தந்தையின் குணநலங்களை ஜெயபிரகாஷிடமும் கண்டேன். நாட்டின் வளர்ச்சிக்குறித்த அவருடைய கோட்பாடுகள் குறித்து நல்ல அபிப்பிராயம் எனக்கு உண்டு. அதுமட்டுமல்ல அன்னை தெரசாவிடமும் எனக்கு நெருக்கம் உண்டு.
நெறியாளர்: நாட்டின் அதிகார வர்க்கமும், நிர்வாகமும் எந்த வித ஊழலின்றி செயல்பட வேண்டும் என்று போராடி வருகிறீர்கள்... புதிய தலைமுறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
தேவசகாயம்: நன்றி.

நன்றி;  புதிய தலைமுறை  

கருத்துகள் இல்லை: