ஆதரவாளர்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!

நண்பர்களைப் பார்த்து நாளாயிற்றே என்று சென்ற ஞாயிறு முழுவதும் நண்பர்களுக்காக ஒதுக்கி இருந்தேன். நண்பர்களுக்கு அலைபேசியில் முன்னரே எங்கள் வருகை பற்றிய விபரம் தெரிவித்திருந்தேன். காலை எழுந்து எல்லாக் கடன்களையும் முடித்து ரெடியானபோது மணி ஏழு ஆனது. ஏங்க மணி ஏழு ஆச்சே டிப்பனை ரெடிபன்னவா இங்கேயே சாப்பிட்டு விட்டு
போயிடலாமே என்றால் என் மனைவி. எனது இளைய மகன் அப்பா ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிலாம் கிளம்புமா என்றான். என்னிடம் நண்பன்  காலை டிப்பனுக்கு வந்துவிடுமாறு சொல்லியிருந்தான். ஆகா காலையிலேயே பிரச்சனை ஆரம்பமாகுதே அதுவும் நண்பர்கள் வீட்டிற்கு செல்லும்போது என் மனதில். குலவிளக்கு ஒரு ஐடியாசொல்லி அருமையாய் காப்பாற்றினால் என்னை(என்ன ஐடியா சொல்ல மாட்டேன் நீங்கதான் கண்டுபிடிச்சி சொல்லணும் சரியா பிளாக் ரைட்டர்ஸ் அண்ட் ரீடர்ஸ் ) .


நண்பனுக்கு தகவல் கிளம்பிவிட்டோம் என்று சொல்லி விட்டு பைக்கைக் கிளப்பினேன். மெயின் ரோடு வழியில் சென்றால் பைக்கில் முன்னாள் தான் உட்காருவேன் என்று அடம் பிடித்து உட்கார்ந்து இருக்கும் இளைய மகன் கண்ணில் தூசி விழும் ஆகவே தெருக்களின் வழியே சென்றுவிடலாம் என்று சொல்லிவிட்டேன். மூன்று    கிலோமீட்டர் தூரமும் வளைந்து நெளிந்து எப்படியோ சென்றுகொண்டிருந்தோம்(தூசிவிலும் இது சுத்தப் பொய் உண்மைக் காரணம் என்ன நீங்க சொல்லுங்க பிளாக் ரைட்டர்ஸ் அண்ட் ரீடர்ஸ் ஒரே ஒரு குழு தரேன் முன்னர் கேட்ட கேள்விக்கு என்ன விடையோ  அதே விடைதான் இதற்கும் )
 வழியில் பெண்கள் தகர டிண்ணை மூன்று புறம் வைத்து அதன் நடுவே பம்ப் ஸ்டவ்வை சிலர் எருவாம்பட்டியை வைத்து அடுப்பில்  இட்டிலி தோசை ஆப்பம் என்று செய்து விற்பனை செய்ய அதை ரசனையுடன் அருகருகே தரையில் அமர்ந்தும் குதிகால் போட்டும் குடிசைக்குள் நின்றுகொண்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஹோட்டல் அப்பா ஹோட்டல் என்று மூன்றுவயது இளைய மகன் என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தான் ஒவ்வொரு தெருவிலும் ஒன்று அல்லது இரண்டு பெண்கள் அவ்வாறான நாஸ்டாக் கடை போட்டு வியாபாரம் செய்து வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். அவர்களது வாடிக்கையாளர்கள் சாதாரண கூலி மக்கள் என்றும் தெரிகின்றது. என் நண்பன் வீடு வந்துவிட்டது அப்பாடி எப்படியோ கொடுத்த வாக்கின்படி காலை டிப்பன் நண்பன் வீட்டில் சாப்பிடலாம் இது என் மனதில்.
 குழந்தைகளுடன் குழந்தைகள் நண்பன் மனைவியுடன் என் மனைவி என்று எல்லோரும் பிசியாய் இருக்க நானும் நண்பனும் அப்படியே வெளியில் காலாற நின்றுகொண்டு தெருவை வேடிக்கை பார்த்துகொண்டு பேசிக்கொண்டு இருந்தோம். அந்த நேரம் எனக்கு தெரிந்தா ரிக்ஸா வண்டி ஓட்டுபவர் அந்த வழியே வந்தார். என்ன பழனி அண்ணே எப்படி இருக்கீங்க இது நான். அருமையா சந்தோசமாய் இருக்கோம் முதலாளி அவர். கொஞ்சம் நேரம் பேசி விட்டு வண்டியை ஒட்டியவாறு சென்றார். நான் அவரைப் பற்றி சிந்தனையில் மூழ்கினேன்.
 திடுக்கிட்டு திரும்பினால் தண்ணீர் செம்புடன் சிஸ்டர் ஆகா இவங்க பெசிமுடிச்சிட்டங்க போல சரி வாடா சாப்பிடலாம் என்று வீட்டினுள் செல்லலாம் என்று திரும்பினால் பார்த்துவிட்டேன். கொஞ்சதூரம் தள்ளி ரிகஷா வண்டியை ஓரமாய் நிறுத்தி வண்டி நகராமல் இருக்க கல் கொண்டு டயருக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இருந்தார்  பழனி அண்ணா. ஏன் இங்கே நிறுத்துகிறார் அவருக்கு வீடு இங்கு இல்லையே யோசனையுடன் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அருகில் உள்ள நாஸ்டாக் கடைக்கு சென்றார்.
 ஒரு தட்டில் வங்கி சாப்பிட ஆரம்பித்தார். எனக்கு வந்ததே கோபம் இவர் என்ன  முட்டாலா என்று என்னுடைய சோசியல் மூளை சொல்ல   இரு வரேன் என்று அவரை நோக்கி நடக்கலானேன். டேய் வாடா என அன்புடன் அழைத்த  நண்பனிடம் இருடா எனக்கு ஒரு கடமை இருக்கு எவ்வளவுதான் விழிப்புணர்வு கொடுத்தாலும் இது மாதிரி மக்களை சமுதாய விழிப்புணர்வும் அரசின் திட்டங்களும் சென்று சேராமலேயே இருக்கின்றது இதோ ஐந்து நிமிடம் வந்து விடுகின்றேன்  என்று சொல்லிக் கொண்ண்டே வேகமாய் நடக்க துவங்கினேன். அவன் எப்பவும் அப்படித்தான் வருவான் இருமா என்று நண்பன் வீட்டிலிருந்த யாரிடமோ சொல்வதுமட்டும் என்காதில் கேட்டு மறைந்தது.

 மெதுவாக பழனி அண்ணன் அருகில் சென்றதும் வாங்க முதலாளி உட்காருங்க சாப்பிடுங்க என்று எண்ணிடம் சொல்ல இன்னும் எனக்கு கோபம் அதிகமானது அருகில் சென்று அரசாங்கம் உங்களமாதிரி இருக்கிறவங்க பயனடைய  தான ஒரு ரூபாய்க்கு இட்டிலி கொடுக்குது எவ்வளவு அருமையான திட்டம் கொண்டுவந்து இருக்காங்க அதை விட்டு என்று மெதுவாய் காதோரம் கடுகடுத்தேன். சத்தமாய் சொன்னால் எங்கே அந்த வியாபாரம் செய்யும் பெண்ணிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமே என்ற பயம்.
 அந்த பெண்மணிக்கு முப்பது முப்பத்தைந்து வயதிருக்கும் அழகான வாயில் புடவை கட்டியிருந்தார். காற்றோட்டமான இடம் புகை லேசா வந்து முகத்தில் மோதி சென்றது கண் எரிச்சல் போல் எனக்கு தோன்றவும் அண்ணே இப்படி வந்து உட்காருங்க இங்க புகை அடிக்காது அங்க காத்துவாக்கில வரும் என்று அப்பெண்மணி அழைக்கவும் சரியாக இருந்தது. என்ன ஒரு கணிப்பு மனிதர்களைப் படிப்பது இதுதானோ நான் என் மனதுக்குள் நினைத்ததும் சொல்லிவிட்டாரே இது தான் குறிப்பறிந்து செயல்படுவதோ? இல்லைங்க நான் சாப்பிட வரல பழனி அண்ணனைப் பார்க்க வந்தேன் என்று சொல்லிக்கொண்டே சற்றே நகர்ந்து அமர்ந்துகொண்டு மீண்டும் பழனி அண்ணனைப் பார்த்தேன். எனக்கு இன்னும் பதில் வரவில்லை.
 அக்கா இன்னொரு ஆப்பம் கொடு என்று தட்டை நீட்டினார் பழனி அண்ணன். நான் பார்த்தேன் எனது பார்வையின் அர்த்தம் புரிந்தவராக . ஆப்பத்தை வங்கி சாப்பிட்டுக்கொண்டே தம்பி சித்த இங்க இருங்க என்றார் சிலேடையாக.
என்னா முனியம்மாக்கா எப்படி இருக்கீங்க என்று குரல் இளம் பெண்மணி இருபது அல்லது இருபத்தைந்து வயதிருக்கும். வா கண்ணு  எப்ப வந்தே இது ஆப்பக்கடை முனியம்மாள். நேத்துவந்தேன்க்கா என்ற பதிலை வாங்கிக் கொண்டே என்ன சாப்பிடுற அஞ்சலை பார்த்து எவ்ளோ நாளாச்சி இந்தா சூடா ஆப்பம் இருக்கு சாப்பிடறியா என்று கேட்டு இரண்டு ஆப்பமும் சாம்பார் சட்டினி வைத்து நீட்டினார் முனியம்மாள். வாங்கிய அஞ்சலை என்னாக்கா ஏவாரம் முன்ன மாதிரி இருக்கா என்னமோ ஜெயலிதா அம்மா இட்டிலி ஒரு ரூவாய்க்கு போடறங்லாம்ல எங்க பக்கத்து வீட்டுல நிதம் அதான் சாப்பிடுறாங்க. ஆமா அஞ்சல அம்மா இட்டிலி வந்ததும் சில  நாளா ஏவாரம் சரியில்லே  என்னா பண்றது நாம எப்படி ஏவாரம் பண்றதுன்னு பயந்துட்டேன் இத நம்பி ராஜேஷ காலேஜ்ல வேற செர்த்துபுட்டேன் அதான் பிள்ள படிப்பு கெட்டுடுமொனு பயந்தேன் இப்ப பரவாஇல்ல.போனவங்க ஒவ்வொருத்தரா திரும்ப வராங்க  சரி வரேன் அக்கா என்று அஞ்சலை  சென்றுவிட்டார்.
ஒரு அறுபது வயது மதிக்கத் தக்க பெரியவர் எனக்கு அருகில் அமர்ந்தார். தாத்தா இன்னைக்கி ஜெயலலிதா இட்டிலி சாப்பிடப் போவலியா இது அந்த நாஸ்டா முனியம்மாவின்  வாரிசாக இருக்கவேண்டும்.  போகலம்மா இது பெரியவர் . அருகில் இருந்த மற்றொருவர் என்னா பெருசு அம்மாஇட்டிலி நல்ல இருந்துச்சா என்றார். அட போப்பா மானங்கெட்ட சாப்பாடு ஒரு மரியாதை இல்ல லைன்ல நிக்க சொல்றான்  போ போன்னு  தள்றான் பிச்சைக் காரனைப் போல் பார்க்கிறான் நாமெல்லாம் உழைப்பாளியா இல்லையா எதோ எப்படி இருக்குனு ஜெயலலிதா இட்லின்னு சாப்பிட்டு பார்க்கப் போனேன் பிளாஸ்டிக் பேப்பர்ல நல்லா அழகாத்தான் தரான்.

  இங்க சாப்பிட்டா மூணு ரூவா அங்க ஒரு ரூவா ரெண்டு ரூவாய்க்கு ஆசைப்பட்டு மானந்தத விடணுமா நாம ஒலைக்றதே ஒரு சான் வயித்துக்காக அத நிம்மதியா சாப்பிட்டாத்தான ஒடம்புல ஓட்டும் என்று பெரியவர் சொல்லிக் கொடிருக்கும் போதே பழனி அண்ணன் என்னை ஓரக்கண்ணால் பார்த்தார்.
இங்க மாதிரி நண்பர்களோட நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியுதா பெரிய பெரிய பணக்காரனெல்லாம் நிக்கிறான் கேட்டா டெஸ்டு பாக்க வந்தானாம் காசுக்கு ஆசை பட்ட பிச்சை காரனுக என்று இன்னும் பேசிக்கொண்டுதான்  இருந்தார். நான் வரேண்ணே என்று சொல்லிக் கிளம்பி விட்டேன். எனக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. பெரியவர் பேச்சுக்கு துணையாக புதுசா ரெண்டுபேர் வந்துட்டாங்க அவங்க ஜெயலலிதா இட்லி பற்றிய பேச்சுக்கள்  என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. அந்த இடம் எனக்குள் ஒரு குழப்பத்தை உண்டுபண்ணியது.

 அரசாங்கம் மக்களை பிச்சை எடுக்க பயிற்சி தருகிறதா நம் பிள்ளைகள் எதிர்காலம் எப்படி இருக்கும் அவர்கள் வளரும் போது நம்  நாடு எப்படி இருக்கும் நாட்டு மக்கள் எப்படி இருப்பார்கள் மரியாதை என்றால் என்ன கவுருவம் என்றால் என்ன நம் பிள்ளைகளுக்கு என்ன சொல்லித் தந்து கொண்டு இருக்கின்றோம் நாம்  உண்மையில் என்ன சொல்லித் தரவேண்டும் என்று யோசனையில் தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிட போகலையா என்பது அழுத்தமாக என் காதில் கேட்டது ஏனோ .............
டேய் எங்கடா போற வாடா சாப்பிடலாம் என்ற குரல் கேட்டு திரும்பினால் நண்பன் வீட்டைத் தாண்டி நான் சென்றுகொண்டு இருக்கின்றேன். எங்கடா போற அம்மா இட்லி சாப்பிடப் போறியா போலாமா என்றான். போகலாம் என்றேன் உறுதியுடன்.( ஏன் போகலாம் என்றேன்)

கருத்துகள் இல்லை: