ஆதரவாளர்கள்

செவ்வாய், 26 நவம்பர், 2013

மதுப்பித்து டிடோக்ஸ் மையம்

குடிப்பழக்கம் (Alcoholism) அல்லது மது சார்புள்ளமை என்பது மது குடிக்கும் பழக்கத்திலிருந்து வெளிவர முடியாத ஒரு பழக்கவடிமை நோய் ஆகும். இந்த நோயுள்ளவர்கள் மது அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் பின்விளைவுகள் மற்றும் அதனால் சமூகத்தில் ஏற்படும் தலைகுனிவு ஆகியவற்றை நன்கு அறிந்தும் கூட தவிர்க்கமுடியாமல் விருப்பத்திற்கு மாறாக, மற்றும் போதும் என்று கட்டுப்படுத்த இயலாதவாறு தொடர்ந்து குடிக்கும் பழக்கத்தை விடாமலிருப்பார்கள். போதை மருந்துகளுக்கு அடிமையாவது போலவே, குடிப்பழக்கம் எனப்படும் இந்நோயும் மருத்துவத்துவ துறையினரால் குணப்படுத்த இயலும் நோயாக வரையறுக்கப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலும், மது சார்புள்ளமை என்ற நோய் டிப்சொமேனியா (மதுப் பித்து) என்று அழைக்கப்பட்டது; பிறகு அச்சொல் குடிப்பழக்கம் என்ற சொல்லால் மாற்றியமைக்கப் பெற்றது. 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக சுகாதார அமைப்பு இதனை மது சார்பு கூட்டறிகுறி எனக் குறிப்பிடலானது.
குடிப்பழக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான உயிரியல் கோட்பாடுகள் உறுதியற்றதாக இருப்பினும் சமூகச் சூழல், மனத்தகைவு, மன நலம், மரபியல் முற்சார்பு, வயது, இனம், பாலினம் ஆகியவை வாய்ப்பு அளிக்கும் காரணிகளாக அமைந்துள்ளன. நீண்ட கால மதுப் பழக்கத்தினால் சகிப்புத் தன்மை மற்றும் பொருண்மச்சார்பு போன்ற உடலியக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் விடாப்பிடியான மதுப்பழக்கத்தை வலுப்படுத்துவதோடு மது குடிப்பதை நிறுத்தும் பொழுது, மது நிறுத்த நோய்க் கூட்டறிகுறி ஏற்படுகிறது. மது மூளை உட்பட, நமது உடலில் இருக்கும் ஏறத்தாழ அனைத்து உறுப்புக்களையும், சேதமடைய வைக்கிறது; கடுமையான, தொடர் மது அருந்தும் பழக்கம் காரணமாக உடலில் நச்சுத்தன்மை ஏறிக்கொண்டே சென்று மது அருந்துவோர் பல விதமான மருத்துவ மற்றும் மன நல சீர்கேடுகளுக்கு ஆளாகிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக மதுப் பழக்கம் கொண்டவர்களுக்கு சமுதாயத்திலும், அவர்களது குடும்ப மற்றும் நண்பர்களிடையேயும் அதீதமான பாதிப்புகள் ஏற்படும்.
குடிப்பழக்கம் என்பது சகிப்புத்தன்மை, நிறுத்தம், பின் மிகையான குடி என மீள் சுற்றாகத் தொடர்வது; குடியின் கேடுகள் அறிந்திருந்தும் அதனை விட முடியாதிருப்பது, அளவைக் கட்டுப்படுத்த இயலாமை ஆகியவை மூலம் ஒருவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதை அறியலாம். குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களையும் அவர்களது தன்மைகள் குறித்தும் அறிய கேள்வித் தொகுதிகள் பயனாகின்றன. ஒருவரை குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க மது நச்சு முறித்தல் மருத்துவ முறை முயல்கிறது; பொதுவாக எதிர் சகிப்புத்தன்மையுடன் கூடிய, எடுத்துக் காட்டாக 'பென்ஸோடியாஸெபைன்' வகையை சார்ந்த தூக்கமருந்துகளால் நிறுத்தல் விளைவுகளை மேலாண்மை செய்வதாகும். மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, குடிப்பழக்கத்திற்கு மீளாதிருக்க குழு மருத்துவம், அல்லது சுய உதவிக் குழுக்களின் உதவி போன்றவை தேவையாகும். சில நேரங்களில், மது அருந்துவோர் பிற மருந்துகளுக்கும் அடிமையாக இருக்கலாம், குறிப்பாக பென்ஸோடியாஸெபைன் வகை மருந்துகள். அவ்வாறாயின் கூடுதலான மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மது அருந்தும் பெண்கள், ஆண்களை விட, மது சார்ந்த அதன் தீய பாதிப்புகளுக்கு அதாவது உடல் ரீதியான, மூளை பாதிப்பு மற்றும் மன நிலை பாதிப்பு மற்றும் சமூகத்தில் அவரைப் பற்றிய தவறான மதிப்பீடுகள் போன்ற இடர்களுக்குக் கூடுதலாக ஆட்படுவர். உலக அளவில் சுமார் 140 மில்லியன் குடிகாரர்கள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

பொருளடக்கம்

வகைப்பாடு

மருத்துவரீதியிலான வரையறைகள்

குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் சார்புக்கான தேசியப் பேரவையும் (The National Council on Alcoholism and Drug Dependence) அமெரிக்க பழக்க அடிமைத்தன விடுவிப்பு மருந்துக் கழகமும் (The American Society of Addiction Medicine) குடிப்பழக்கத்தை "குடிக்கும் பழக்கத்தில் கட்டுப்பாடின்மை, எப்பொழுதுமே மது சார்ந்த நினைப்பு, தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் இருக்கும் பொழுதும்கூட மது அருந்துவது, மற்றும் சிந்தித்தலில் நிலைகுலைவு போன்ற அறிகுறிகள் கொண்ட ஒரு முதன்மையான, நீடித்த நோய்" என வரையறுத்துள்ளது. தி டிஎஸ்எம்-IV (DSM-IV - Diagnostic and Statistical Manual of Mental Disorders, 4th Edition) [1] என்ற கையேடு பாதகமான விளைவுகள் இருந்தபோதிலும் திரும்பத் திரும்ப மது அருந்துவதை, மதுவைத் தவறாகப் பயன்படுத்துதல் (alcohol abuse) என்றும், தவறான மதுபாவனையுடன், மருந்துகளுக்கான பொறுமை அளவு (Drug tolerance)[2], திடீரென மருந்து/மது அருந்துதலை நிறுத்துவதால் ஏற்படக்கூடிய விலகல் நோய் அறிகுறிகள் (withdrawal) [3], மற்றும் குடிப்பதற்கு அடக்கமுடியாத பேராசை என்பனவும் சேரும்போது அதனை, மதுவைச் சார்ந்திருக்கும் நிலை அல்லது மதுவில் தங்கியிருக்கும் நிலை என்றும் வரையறைப்படுத்தியுள்ளது. DSM-V இல் மதுவைத் தவறாகப் பயன்படுத்தல், மதுவைச் சார்ந்திருக்கும் நிலை ஆகிய இரண்டையும் சேர்த்து, மது பாவனைச் சீர்கேடு என்ற தனியான உள்ளடக்க வகையில் கொண்டு வரலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உளவியல் மற்றும் மனநோய்கான சிகிச்சை முறை ஆகியவற்றுக்கிடையே, குடிப்பழக்கம் என்ற சொல்லே பொதுவாக, பரவலாக மது சார்புள்ளமை சொல்லிற்குப் பதிலாக பயன்பாட்டில் உள்ளது.

சொல்லியல்

மதுவுக்கும், மதுவை அருந்துபவருக்கும் இருக்கும் தொடர்பை விளக்க பல சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. உபயோகம் , தவறான பயனீடு , கனத்த பயன்பாடு , தவறான பயன்பாடு , பழக்க அடிமைத்தனம் , சார்புள்ளமை ஆகிய சொற்கள் பொதுவாக குடிக்கும் பழக்க வழக்கங்களைக் கொண்ட மனிதர்களைச் சுட்டுவதாகும், ஆனால் பயன்படுத்தும் சூழ்நிலையைப் பொறுத்து அச்சொற்களின் பொருள் வேறுபடும்.
உபயோகம் அல்லது பயன்பாடு பொதுவாக ஒரு பொருளின் பயன்பாட்டைக் குறிப்பதாகும். ஒரு தனி மனிதன் மதுவுடன் எந்தப் பானத்தைக் குடித்தாலும், அவன் மதுவைப் பயன்படுத்துபவன் ஆவான். தவறான பயனீடு , பிரச்சனையான பயன்பாடு , தவறான பயன்பாடு , கனத்த பயன்பாடு ஆகியவை யாவும் மதுவின் தவறான பயன்பாட்டைக் குறிப்பதாகும் மேலும் அதனால் உடல் ரீதியில், சமுதாய ரீதியில், அல்லது ஒழுக்கம் சார்ந்த அறமுறைப் பாதிப்பு குடிப்பவனுக்கு ஏற்படலாம்.
மிதமான பயன்பாடு என்பதற்கு அமெரிக்க உணவுக்கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களில் ஒரு நாளைக்கு ஆண்கள் இரண்டு மதுபானங்களுக்கு மேலன்றியும், பெண்கள் ஒரு முறை மட்டுமே மதுபானத்தை அருந்தலாம் என்று உள்ளது.

குறிகள் மற்றும் அறிகுறிகள்

நீண்ட காலத்திற்கு மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

சாராயம் அருந்துவதால் ஏற்படும் கூடுதலான கேடுகளையும் மிதமானப் பயன்பாட்டால் கிடைக்கும் நன்மைகளையும் ஒப்பிடும் படிமம்.

எதனோல் சாராயத்தின் குறிப்பிடத்தக்க நீண்ட கால பாதிப்புகள். மேலும், கருத்தரித்த பெண்டிரில், கருவுயிரும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு.(மது சார்ந்த உருப்பெற்ற கரு பாதிப்பு நோய்க் கூட்டறிகுறி)
சாராய மயக்கம் கொண்டவர்களுக்குள் காணப்படும் முதன்மையான அறிகுறி பாதிப்படைந்தவரின் உடல் நலத்தை சேதப்படுத்தும் வகையில் மேலும் மேலும் குடிக்கத் தூண்டுவதாகும். இரண்டாவதாக மதுவை குடிக்காமல் இருப்பதற்கான கட்டுப்பாடில்லாமல் இருக்கும் இயலாமை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் பல வழிகளில் வெளிப்படும்.
சாராய மயக்கம் காரணமாக குடிப்பவர், அவரின் குடும்பம் மற்றும் அவருடைய நண்பர்களுக்கு சமூகத்தில் குறிப்பிடக்கூடிய அளவில் சமுதாய விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சாராய மயக்கம் என்பதனை சகிப்புத்தன்மை, உடலியச் சார்பு, மதுபானங்களை தவறுதலாக பயன்படுத்துவதில் இருந்து மீள இயலாமை ஆகிய குறிப்பிட்ட அறிகுறிகளால் அறிந்து கொள்ளலாம். மதுபானங்களால் தூண்டப்படும் உடலியக்கவியல் சகிப்புத்தன்மை, உடலியச் சார்பு போன்றவை குடிப்பவர் குடிக்காமல் இருக்க இயலாமைக்கு காரணிகளாக விளங்குகிறது.
சாராய மயக்கம் மன நலத்தையும் வெகுவாகப் பாதித்து மன நலச் சீர்கேடுகள் உருவாகக் காரணமாக இருக்கலாம். குடிப்பவர்களில் ஏறக்குறைய 18 விழுக்காடு மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

உடல் நல பாதிப்பு

மது அருந்துவதனால் ஏற்படக்கூடிய உடல் நலப் பாதிப்புகளில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி, கணைய அழற்சி, காக்காய் வலிப்பு (epilepsy), பன்மை நரம்புகள் இயக்கத் தடை (polyneuropathy), மதுசார் மறதிநோய், இதயநோய்கள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், வயிற்றுப் புண், பால்வினை செயல் பிறழ்ச்சி, போன்றவை ஏற்படுவதுடன், இறுதியில் சிலசமயம் இறப்பும் ஏற்படும். மேலும் குடிப்பழக்கம் உள்ளவர்கள் கடுமையான புலன் உணர்வு சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடுகிறது. அறிவாற்றல் இழப்பு மற்றும் உளத் தளர்ச்சி போன்ற வியாதிகளில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு நிகழ்வுகள் மதுவை அருந்துவதால் ஏற்படுவதாகும். மேலும் அறிவாற்றல் இழப்பு போன்ற நோய்கள் வருவதற்கு குடிப்பழக்கம் இரண்டாவது இடத்தை பிடிக்கும் காரணியாக இருக்கிறது. உடல் நலத்தைப் பாதிக்கும் இதர காரணிகளில் இதயகுழலிய வியாதி (cardeovascular disease), அகத்துறிஞ்சாமை (malabsorbtion), மது சார்ந்த கல்லீரல் நோய், மற்றும் புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான மிகையான சூழிடர் இருக்கின்றது. தொடர்ந்து மது அருந்துவதால் மைய நரம்பு மண்டலமும் புற நரம்பு மண்டலமும் கூடச் சேதமடையலாம். பொதுவாக குடிகாரர்கள் இறப்பதற்கு காரணம் இதயகுழலிய கோளாறுகள்தான் என அறியப்பட்டுள்ளது. அதிகரித்த குடிப்பழக்கத்தால் ஆண்களை விட, பெண்களிலேயே அதிகளவில் சிக்கல்கள் ஏற்படுவதாகவும், குடியினால் ஏற்படும் இறப்பும் பெண்களிலேயே அதிகம் இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது.

மன நல பாதிப்புகள்

நீண்ட காலத்திற்கு மதுவைத் தவறாகப் பயன்படுத்தினால் பல வகையான மன நல பாதிப்புகளுக்கு ஆளாகலாம். இது தொடர்ந்தால், அதன் காரணமாக நீண்ட-கால பாதிப்புகள் உடலில் நச்சுத் தன்மையைக் கூட்டுவதோடு, மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கும். அதனால் உளவியல் ரீதியாக மனநிலை மிகையாகப் பாதிக்கப்படலாம். பொதுவாக குடிப்பவர்களிடையே தவிப்பு/மனக்கலக்கம், அதிகரித்த மனச்சோர்வு போன்ற மனநிலைச் சீர்கேடுகள் காணப்படும். குடிப்பவர்களுக்கிடையே 25 விழுக்காடு மக்கள் கடுமையான மனநலச் சீர்கேடுகளால் அவதியுறுகின்றனர். மேலும் மது அருந்துதலை நிறுத்த முனையும்பொழுதும், இது போன்ற மனநலப் பாதிப்பிற்கான அறிகுறிகள் முதலில் தோன்றுவதால் மனநிலை மேலும் சீர்குலையும், ஆனால் தொடர்ந்து மது குடிப்பதைத் தவிர்ப்பதால், சிறுகச் சிறுக மாற்றங்கள் ஏற்பட்டு, இந்த அறிகுறிகள் மொத்தமாக மறைந்துவிடும்.
கடுமையான மது அருந்தும் தவறான போக்கினால் உளப்பிணி, குழப்பம் மற்றும் மூளை உறுப்பில் ஏற்படும் சீர்கேட்டு நோய்க் குறித்தொகுப்பு போன்ற பாதிப்புகள் தூண்டப்படலாம். மேலும் அதனால் மனப்பித்து போன்ற கடுமையான மனநலச் சீர்கேடுகள் கண்டுபிடிக்க இயலாமல் போகலாம். தொடர்ந்த குடிப்பழக்கத்தால், மூளையின் (neurochemical) நரம்பு வேதியியல் முறைமை பழுதடைந்து அச்சத்தால் ஏற்படும் சீர்குலைவு நிலைமைக்குக் கொண்டுவிடலாம். அச்சத்தால் ஏற்படும் சீர்குலைவு மது குடிப்பதை நிறுத்தும்போதும் ஏற்பட்டு, நிலைமை மேலும் மோசமாகலாம்.
பெரும் மனத்தளர்ச்சி கோளாறுகளும், குடிப்பழக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாய் இருப்பது நன்றாக கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட முதன்மையான நோயுடன், வேறு ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட நோய்களோ இணைந்திருக்கும் நிகழ்வுகளில், மது அருந்துவதை நிறுத்துவதால் ஏற்படக்கூடிய மனத்தளர்ச்சி நிலையையும், அவ்வாறில்லாமல் மது நிறுத்தத்துடன் தொடர்பற்று ஏற்படக்கூடிய மனத்தளர்ச்சி நிலையையும் வேறுபடுத்தி அறிய முடியும். மது நிறுத்தத்துடன் தொடர்பற்ற மனத்தளர்ச்சி நிலை முதன்மையானதாகவும், மது நிறுத்தத்துடன் தொடர்புள்ள மனத்தளர்ச்சி இரண்டாம்நிலையினதாகவும் இருக்கும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், வேறு மருந்துகளும் பயன்படுத்துபவராயின் மனத்தளர்ச்சிக்கான சூழிடர் மேலும் அதிகரிக்கும்.
மனநல பாதிப்புக்கள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் வேறுபட்டு இருப்பது அறியப்பட்டிருக்கின்றது. பெண்களில் குடிப்பழக்க மனநலச் சீர்கேடு கொண்டவர்களில், பொதுவாக மனத்தளர்ச்சி (Depression), மனக்கலக்கம் (Anxiety), அச்சத்தாலேற்படும் கோளாறுகள் (Panic disorders), மன அழுத்தத்தின் பின்னர் ஏற்படக்கூடிய கோளாறுகள், ஆளுமைச் சிதைவுக்கான ஆரம்பம் போன்றன இணைந்து காணப்படும். ஆண்களில் தற்காதல் ஆளுமைச் சிதைவு, சமூகத்துக்கு எதிரான ஆளுமைச் சிதைவுகள், மனப்பித்து, கவனப் பற்றாக்குறையால் ஏற்படும் மிகை இயக்கம் போன்ற நிலைகளுடன் இணைந்திருக்கின்றன.

தற்கொலைகள்

கடுமையாக குடிப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பு மிகையாகக் காணப்படுகிறது, மேலும் நீண்ட நேரம் குடிப்பவர்கள் தற்கொலை செய்வதற்கான சூழ் இடர் அதிகமாகக் காணப்படுகிறது. குடிப்பழக்கம் கொண்டவர்கள் தற்கொலை புரிவதற்கான சூழ் இடர் மிகையாக இருப்பதற்கான காரணங்களில் மதுவைத் தவறுதலாகப் பயன்படுத்துவதும் ஒன்றாகும், இதன் காரணமாக அவர்களுடைய மூளை வேதியியலில் ஏற்படும் உயிரியல் சார்ந்த உருக்குலைப்பு, மற்றும் சமூகத்தில் தனித்து விடப்படுவது ஆகியவை தற்கொலைக்கான காரணிகளாகும். பொதுவாக மதுவைத் தவறாகப் பயன்படுத்தும் இளம் வயதினரும் தற்கொலை செய்துகொள்வது சகஜமாகும். 25 விழுக்காடு வரையிலான இளம் வயதினர் மதுவைத் தவறாகப் பயன்படுத்தியதால் தற்கொலை புரிந்தார்கள் என்று புள்ளி விவரங்கள் மூலம் அறியப்படுகிறது.
உலக அளவில் நடைபெறும் தற்கொலைகளில் 50 விழுக்காடு தற்கொலை மது குடிப்பதனாலோ அல்லது போதைப்பொருட்களாலோ ஏற்படுவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்தார்கள். இளம் வயதினரிடையே இந்த அளவு மேலும் மிகையாக காண்கின்றது, மது அல்லது போதைப்பொருட்களைத் தவறாகப் பயன்படுத்துதலால் 70 விழுக்காடு வரை இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சமூக விளைவுகள்

குடித்துவிட்டு தன்நினைவின்றி சாலையோரம் விழுந்துகிடக்கும் ஒரு மதுரை நகரவாசி.
  • சாராய மயக்கம் காரணம் ஏற்படும் சமூக விளைவுகள் மிகவும் பயங்கரமானதாகும். மேலும் அவற்றிற்கு மூளையில் ஏற்படும் கடுமையான நோய்க்குரிய மாற்றங்கள் மற்றும் ஒரு வகையில் மதுவின் மயக்கமூட்டும் தன்மையும் காரணமாக இருக்கலாம்.
  • மதுவைத் தவறாகப் பயன்படுத்தும் வழக்கம் காரணமாக, குழந்தைகளிடம் தவறான நடத்தை, குடும்பத்தில் வன்முறை, கற்பழிப்பு, திருட்டு, வலிந்து தாக்குதல் போன்ற வன்முறைகள் உட்பட, குற்றங்களைப் புரியும் சூழ் இடர் அதிகரிக்கிறது.
  • சாராய மயக்கம் காரணமாக வேலை இல்லாமை நிலைமை உருவாகலாம், அதனால் நிதி பற்றாக்குறை ஏற்படலாம். மேலும் வாழ்வதற்கான வசதிகளை இழக்க நேரலாம்.
  • கண்ட கண்ட நேரங்களில் குடிப்பதால் எடுக்கும் சுருக்கிய தீர்வுகளுடன் கூடிய அவசர முடிவுகள், சட்ட ரீதியிலான பிரச்சனைகளை உருவாக்கலாம். எடுத்துக்காட்டாக குடித்துக்கொண்டே வாகனத்தை செலுத்துவது, அல்லது பொது வாழ்வமைதி சீர்குலைப்பு, அல்லது பொல்லாங்குக் குற்றம் சார் நடத்தைக்கான குடிமுறை தண்டனை, குடிமுறை தண்டத்தொகை போன்றவை.
  • ஒரு குடிகாரனின் நடத்தை மற்றும் உள வலுக்குறைவு போன்ற காரணங்களால் அவரைச் சுற்றியுள்ளோர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் அதனால் அவர் தனிமைப்பட்டு, இணையரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு அது திருமண முறிவில் கொண்டு விடலாம். மேலும் குடும்பத்தில் வன்முறை ஏற்படலாம்.
  • இதனால் தன்-மதிப்புக் குறைவால் மனம் பாதிக்கப்பட்டு அவன் சிறையில் கூட அடைக்கப்படலாம். சாராய மயக்கம் காரணமாக அவரின் குழந்தைகள் நோக்குவாரற்று வளர்க்கப்படலாம், அப்படிப்பட்ட குடிகாரரின் குழந்தைகளின் உணர்ச்சிவயப்பட்ட உருவாக்கம், அவர்கள் வயதுக்கு வந்த பின்னரும், தேங்கிக் காணப்படும்.
  • நீண்ட கால மது பயன்பாடு பொதுவாக சமூகத்திற்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது; எடுத்துக்காட்டாக, பணிக்கு செல்லாமல் இருப்பதால் ஏற்படும் சம்பள இழப்பு, மருத்துவ செலவுகள், மற்றும் இரண்டாம் நிலை சிகிச்சைக்கு ஆகும் செலவுகள். மதுவின் தாக்கத்தால் ஏற்படும் தலைக் காயங்கள், மோட்டார் வாகன விபத்துக்கள் ஆககியவை. இதுவே வன்முறை மற்றும் தேவை இல்லாத தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கான முக்கிய காரணியாகும்.
  • செலவுகளுக்கு அப்பால், பாதிக்கப்பட்டத் தனி மனிதன், அவன் குடும்பம் மற்றும் சுற்றத்தார் உடல்வலிக்கும் வேதனைக்கும் ஆளாகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு கருத்தரித்த பெண்மணி மதுவை அருந்துவதால், அவளுக்கு மதுசார் கருபாதிப்பு நோய்க் கூட்டறிகுறி ஏற்படலாம், இந்த கூட்டறிகுறி ஒரு குணப்படுத்த இயலாத, சேதத்தை உருவாக்கும் நிலைமையாகும்.
  • உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பு ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தின், ஒன்று முதல் ஆறு விழுக்காடு வரையிலான செலவுகள், மதுவின் தவறான பயன்பாட்டை சரிகட்டுவதற்காகவே செலவழிக்கப்படுவதாகச் சுட்டுகிறது.
  • ஒரு ஆஸ்திரேலியக் கருத்துக்கணிப்பின் படி, போதை மருந்துகள் தவறுதலாக பயன்படுத்துவதற்கு ஆகும் மொத்த செலவுகளில், 24 விழுக்காடு செலவுகள் மதுவிற்காக செலவாகும் சமுதாய செலவுகளாக கணக்கெடுத்துள்ளது; மேலும் இது போன்ற கனடா நாட்டில் மேற்கொண்ட ஆய்வு மதுவின் செலவு விகிதத்தை 41 விழுக்காடாகக் கணக்கிட்டது.
  • ஐக்கிய இராச்சியத்தில் அனைத்து மது சார்ந்த தவறான பயன்பாட்டிற்கு ஆகும் செலவுகளை ஆண்டு தோறும் சுமார் £18.5–20 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது (2001 ஆண்டின் நிலைமை).

மது அருந்துவதை விட்டுவிடுதல்

மது அருந்துவதை விட்டுவிடுவது என்பது, அபின், கொகெய்ன் போன்ற போதை மருந்துகளை உட்கொள்வதில் இருந்து விலகுவது போல அல்லாமல், வேறுபட்டு இருப்பதுடன், நேராக மரணத்திற்கே கொண்டுவிடலாம். எடுத்துக்காட்டாக போதைமிகு அபின் உட்கொள்வதை நிறுத்துவதால் இறப்பு ஏற்படாது. போதைமிகு அபின் மற்றும் கொகெய்ன் போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டு அந்தப் பொருட்களை நிறுத்தும்போது, மரணம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவனின் உடல் நிலையில் கடுமையான ஏதோ ஒரு பிரச்சனை காரணமாகவே அவ்வாறு நடந்திருக்கக் கூடும். ஆனால், நல்ல உடல் நலத்துடன் மது அருந்துபவன், மதுவைக் குடிப்பதிலிருந்து பின்வாங்கும் பொழுது, போதிய தற்காப்புமுறைகளை எடுத்துக்கொள்ளாவிட்டால், மரணம் நிச்சயமே. துயிலூட்டும் வகையிலான மருந்துகள் பார்பிசுரிக் அமில உப்புக்கள் மற்றும் பென்சோடையசெபின் போன்ற மருந்துகள் மதுவைப்போலவே செயல்புரிவதாகும் (மதுவும் ஒரு துயிலூட்டும் மருந்து வகையைச் சார்ந்தது தான்) இவை போன்ற மருந்துகளும் மதுவும் பின்வாங்கப்பட்டால் மரணம் ஏற்படும் சூழ் இடர் காணப்படுவதாகும்.

நடத்தை மாற்றங்கள்

மதுவின் முதன்மையான செயலாக்கம் ஜிஏபிஏ வகையிலான வாங்கிகளைத் தூண்டி, அதன் மூலம் மைய நரம்பு மண்டலத்தில் தளர்ச்சியை ஏற்படுத்தும். திரும்பத் திரும்ப மிகையாக மதுவை அருந்துவதால், இந்த வாங்கிகள் மேலும் செயலிழந்து போவதுடன், அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விடும். அதனால் சகிப்புத்தன்மை மற்றும் பிறரைச் சார்ந்து வாழ்தல் போன்ற மாற்றங்கள் ஏற்படும். அதனால் மது அருந்துவதை நிறுத்தினால், அதுவும் திடுதிப்பென்று நிறுத்தினால், பாதிக்கப்பட்டவரின் நரம்பு மண்டல செயல்முறைமையில் கட்டுப்பாடற்ற நரம்பிணைப்புக்கள் ஏற்படும். இதனால் தவிப்பு, உயிருக்கு ஆபத்தான வலிப்பு, ஒழுங்கற்ற நடத்தைகள், மாயத்தோற்றங்கள், நடுக்கம், மற்றும் சில நேரங்களில் இதயத் திறனிழப்பு (Heart failure) கூட நிகழலாம்.
கடுமையான பின்வாங்கும் அறிகுறிகள் ஒன்றிரண்டு வாரங்களில் குறைந்து விடலாம். உறக்கமின்மை, தவிப்பு, மகிழ்ச்சியை அனுபவிக்க இயலாத தன்மை போன்ற கடுமையற்ற அறிகுறிகள் 'பின்வாங்குதலுக்கு பிறகான நோய்க் குறித்தொகுப்பு' போன்று சிலகாலம் தொடரலாம். தொடர்ந்து மதுவைத் தவிர்ப்பதால், ஓரிரு வருடங்களில், கொஞ்சம் கொஞ்சமாகப் பின்வாங்குதலுக்கு பிறகான நோய்க் குறித்தொகுப்புகளும் மறைந்து உடல் நலம் மேம்படும். உடலும், மைய நரம்பு மண்டலமும் மெதுவாக சகிப்புத்தன்மை மற்றும் ஜேஏபிஏ செயல்பாட்டை திரும்பவும் வழிமுறைகளுக்கு கொண்டு வரும்பொழுது, பின்வாங்குதலுக்கான அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிடும்.

சூழ் இடர் காரணிகள்

மது அருந்தும் பழக்கம் தொடங்கும் வயதும், மரபியல் காரணிகளும் சிக்கலான முறையில் இணைந்து, குடிப்பழக்கத்திற்கான சூழ் இடரை அதிகரிக்கும் உடலின் வளர்சிதைமாற்றத்துக்குக் காரணமான மரபணுக்களே குடிப்பழக்கத்துக்கும் காரணமாக இருப்பதனால், அது குடும்ப வரலாற்றில் குடிப்பழக்கம் இருப்பின் சூழ் இடரை அதிகரிக்கும். இளம் வயதில் மது அருந்த ஆரம்பிக்கும் ஒருவருக்கு, மரபணுக்கள் இயல்பாக வெளிப்படுத்தப்பட்டு, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகும் தன்மை அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. மேலும் குறிப்பிட்ட மரபணுக்களின் தாக்கம் உள்ளவர்கள் சராசரி வயதுக்கு முன்னராகவே குடிப்பழக்கத்து ஆளாகி விடுவதாகவும் சொல்லப்படுகின்றது .
இளம் வயதிலேயே குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் அவர்கள் வயதுக்கு வருவதற்குள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாவதுடன் ஏறத்தாழ 40 விழுக்காடு பேர் அதிகமாக மது அருந்துவதை வழக்கமாக கொண்டனர். மிகையான மனவேதனைக்கும், அதிர்ச்சிக்கும் சிறிய வயதிலேயே ஆளானவர்கள் குடிப்பழக்கம் அல்லது போதை மருந்துகளுக்கு அடிமையாகும் சூழ் இடர் மிகையாக உள்ளது. மரபு சார்ந்த மற்றும் சுற்றுப்புற சூழ்நிலை போன்ற பலதரப்பட்ட சிக்கலான மற்றும் கலவையான காரணிகள், எ.கா. மனதை அழுத்தும் சித்திரவதை நினைவுகள் நிறைந்த குழந்தைப்பருவம், போன்றவை சாராய மயக்கத்தின் சூழ் இடரைப் பெருகச் செய்யும். குழந்தைகளை சமநிலையுடன் நடத்தும் மற்றும் ஆதரவாக இருக்கும் குடும்பங்களில், குடிப்பழக்கம் ஏற்படும் சூழ் இடர்கள் குறைவாக காணப்படும்

நோய் குறியறிதல்

வடிகட்டுதல்

கட்டுப்பாடற்ற மதுப்பழக்கத்தைப் பற்றி கண்டறிய பல விதமான கருவிகள் உள்ளன. இவை பெரும்பாலும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் சுய அறிக்கைகள் ஆகும். மேலும் பொதுவாக மது பயன்பாட்டின் அளவையும் கடுமையையும் கொண்டு ஒரு மதிப்பெண்ணை வழங்குவதாகும்.[12]
  • ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் விரைவாக நோயாளிகளை வடிகட்ட பயன்படும் ஒரு எடுத்துக் காட்டாக அதன் நான்கு கேள்விகளின் அடிப்படையில் பெயரிட்ட சிஏஜிஈ (CAGE) வகையிலான கேள்விப்பட்டியல் அமைந்துள்ளது.
இரண்டு "ஆம்" பதில்கள் பதிலளிப்பவரை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் காட்டும்.
இந்தக் கேள்வித்தொகுப்பு கீழ்வரும் கேள்விகளை கொண்டுள்ளது:
  1. உங்கள் குடியளவை குறைக்க வேண்டும் என எப்போதாவது நினைத்ததுண்டா ? ( Cut)
  2. உங்கள் குடித்தலை யாரேனும் விமரிசிப்பதால் எரிச்சல்படுத்தி உள்ளனரா ? ( Annoyed)
  3. எப்போதாவது குற்ற உணர்வுடன் குடித்துள்ளீர்களா ? (Guilty)
  4. காலையில் எழுந்தவுடன் தொக்கிய விளைவை குறைக்க குடிக்க வேண்டும் என எண்ணியதுண்டா ? (Eye-opener)
இந்த சிஏஜிஈ கேள்விப்பட்டியல் மது சார்ந்த பிரச்சினைகளை எளிதில் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பினும் குறைந்த அளவில் மது அருந்தும் பழக்கம் உள்ளோர், வெள்ளை நிறப் பெண்டிர் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செல்லுபடியாகாது.
  • மது சார்புள்ளமை தரவு கேள்விப்பட்டியல் சிஏஜிஈ கேள்விப்பட்டியலை விட மேலும் உயர்ந்ததாகும். மது சார்புள்ளமை கொண்டோர் மற்றும் கடுமையாக மது அருந்துவோர் ஆகிய இரு வகையினரையும் பிரித்து நோய்க்குறியறிதலை செழுமையாக்கும் இயல்புடையது.
  • மிச்சிகன் சாராய சோதனை (தி மிச்சிகன் அல்கஹோல் ஸ்க்ரீனிங் டெஸ்ட் (எம்ஏஎஸ்டி)) என்பது சாராய மயக்கம் இருப்பதை கண்டறிய பரவலாக பயன்படும் வடிகட்டும் கருவியாகும், இதன் அடிப்படையில் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டும் குற்றம் புரிந்த மக்களுக்கு நீதி மன்றங்களில் தண்டனை வழங்கப்படுகிறது.
  • சாராயப் பயன்பாட்டு கோளாறு கண்டறிச் சோதனை (தி அல்கஹோல் யூஸ் டிசோர்டர்ஸ் ஐடெண்டிபிகேசன் டெஸ்ட் (ஏயுடிஐடி) )என்பது உலக சுகாதார அமைப்பு மேம்படுத்திய வடிகட்டும் கேள்விப்பட்டியலாகும். இந்தச் சோதனை முறை ஆறு நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதாலும், அனைத்து உலகிலும் பயனில் உள்ளதாலும் சிறப்பானதாகும். சிஏஜிஈ கேள்விப்பட்டியல் போலவே, மிகவும் எளிதான கேள்விகளைக் கொண்டதாகவும் இதில் அதிக மதிப்பெண்கள் பெற்றால் இன்னும் உன்னிப்புடன் கவனிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது.
  • படிங்டன் சாராய சோதனை (தி படிங்டன் அல்கஹோல் டெஸ்ட் (பிஏடி)) என்ற கேள்விப்பட்டியல் விபத்து மற்றும் அவசர நிலைத் துறைகள் பயன்பாட்டிற்காகவென்றே தயாரிக்கப்பட்டது. அதுவும் ஏயுடிஐடி கேள்விப்பட்டியலைப் போலவே இயைபு கொண்டதாகும் ஆனால் அதை பயன்படுத்த தேவைப்படும் நேரம் ஐந்துபங்கில் ஒன்றாக குறைந்து காணப்படுகிறது.

மரபியல்சார்ந்த முற்சார்பு நோய் வகை சோதனை

குடிப்பழக்கத்திற்குக் குறிப்பிட்ட காரணிகளை மட்டும் என அறுதியிடல் இயலாது - அதில் மரபியலும் அடங்கும் — ஆனால் மரபணுக்கள் "உடல் மட்டும் மனதில் ஏற்படும் மாற்றங்களில் குறுக்கிட்டு, நிகழும் செயல்பாடுகளை பாதிக்கும். மேலும் அந்த தனி மனிதனின் வாழ்க்கை பட்டறிவினால் இணைந்து குடிப்பழக்கத்தை எதிர்க்கின்ற அல்லது தவிர்க்கின்ற நிலைக்கு உந்தப்படுகிறார்கள்" என மன நல மரபுபியலர்களான ஜான் ஐ., நுர்ன்பெர்கேர், ஜூனியர்., மற்றும் லாராஜீன்பெய்ரூட் குறிப்பிடுகின்றனர். இது வரை சில சாராய மயக்கம்-சார்புள்ள மரபணுக்களை மட்டும் கண்டறிந்துள்ளதாகவும், ஆனால் எதிர்காலத்தில் மேலும் பல கண்டுபிடிக்கப் படலாம் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
குடிப்பழக்கம் மற்றும் அபின் கலந்த மருந்துகளுக்கும் சார்புடைமை கொண்ட ஒரு எதிருரு இருப்பதை சோதனைகள் மூலம் கண்டுள்ளார்கள். டிஆர்டி2 டிஏக்யு (பல்லுருவியல்) என அறியப்படும் மனித டோபமைன் வாங்கும் மரபணுக்களில் வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்துள்ளனர். ஏ1 எதிருரு (வேறுபாடு கொண்ட) இந்த பல்லுருவியலில், அபின் சார்ந்த மற்றும் மதுவுக்கு அடிமையாகும் சார்புத்தன்மை கொண்ட சிறிய ஆனால் குறிப்பிடும் படியான ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த எதிருரு குடிப்பவர்கள் மற்றும் போதை மருந்தை உட்கொள்பவர்களிடம் பொதுவாக சிறிது மிகையான அளவில் காணப்பட்டாலும், அது மட்டுமே குடிப்பழக்கத்தை தூண்டும் வகையான பொருளாகும் என்பது நிச்சயமல்ல, மேலும் ஆய்வாளர்கள் DRD2 முறையில் கிடைத்த ஆதாரங்கள் நேர்மாறானதாக இருப்பதாக கருதுகிறார்கள்

சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை

மது அருந்திய அளவை சரியாக தெரிந்து கொள்ள, நம்பகமான சோதனை வழிமுறைகள் உள்ளன. அவற்றில் பொதுவாக மேற்கொள்ளப்படும் சோதனை இரத்தத்தில் மதுவின் அளவை ஆய்வதாகும் (பிஏசி). இந்தச் சோதனை குடிப்பவர்கள் மற்றும் குடிக்காதவர்களை வேறுபடுத்தாவிட்டாலும் நீண்ட நாட்களுக்கு கடுமையாக குடித்தவர்களின் உடலில், கீழே கொடுக்கப்பட்ட அறிகுறிகள் காணப்படும்
  • பெருஞ்செல்லிரத்தம் (வீங்கிய எம்சிவி)1
  • உயர்த்திய GGT²
  • AST மற்றும் ALT அளவுகள் உயர்ந்தும் மேலும் AST: ALT விகிதம் 2:1 ஆகக் காணப்படும்.
  • உயர்ந்த காபோவைதரேட்டு குறைவு மாற்றம் (CDT)
இருந்தாலும், இந்த வகையான இரத்தப் பரிசோதனைகள் யாவுமே, வடிகட்டும் கேள்விப்பட்டியல் போல வராது.

தடுப்பு முறைகள்

மது சார்ந்த பயன்பாடு சமூகத்தை மொத்தமாக பாதிப்பதால், உலக சுகாதார அமைப்பு, மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இதர மாவட்டம் சார்ந்த அமைப்புகள், தேசீய அரசாங்கங்கள் மற்றும் மேலவைகள் போன்ற அனைவரும் கலந்து சாராய மயக்கத்தால் ஏற்படும் கெடுவினைகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளன.
போதை மருந்துகள் மற்றும் மதுவிற்கு அடிமையாகி, அவற்றை தவறாக பயன்படுத்துவதால் இளம் வயதினர் மற்றும் இளைஞர்கள் பெறும் அவதிக்கு ஆளாகிறார்கள், அவர்களுடைய உடல் நலம், சமூக அந்தஸ்து மற்றும் கல்வியில் கவனக்குறைவு ஆகிய குறைபாடுகளில் இருந்து அவர்களை மீள வைப்பது ஒரு முக்கியமான பணியாகும். மது சார்புள்ளமை மற்றும் மதுவை தவறாக பயன்படுத்துதல் போன்ற கெடுவினைகளை குறைக்கும் பொருட்டு, இது போன்ற பொருட்களை சட்ட ரீதியில் கடைகளில் வாங்குவதற்கு ஒரு உயர்ந்த வயது வரம்பு மற்றும் விளம்பரங்களை குறைப்பது அல்லது தடை செய்வது போன்ற உத்திகள் பரிசீலனையில் உள்ளன.
நம்பத் தகுந்த மற்றும் சாட்சியத்துடன் கூடிய விழிப்புணர்வுக்குகு வழிவகுக்கக்கூடிய, மக்களுக்கு சென்றடையும் வகையிலான மது மயக்கம் மற்றும் போதைப் பொருட்களைப் பற்றிய செய்திகளை, சிறு ஊடகங்கள் மூலமாக வழங்குவதும் கருத்தில் உள்ளன. பெற்றோர்களுக்கு மது மயக்கம் மற்றும் போதைப் பொருட்கள் பற்றிய அறிவுரை வழங்குதல் மற்றும் மன உடல் நிலை பாதிப்புகளுடன் கூடிய சிறு வயதினர்களைக் குறிவைத்து அவர்களுக்கு சரியான பாதையை உணர வைத்தல் ஆகிய செயல்பாடுகளும், மது மற்றும் போதைப் பொருட்களை தவறாக பயன்படுத்துவதில் இருந்து தடுப்பதற்கான நடவடிக்கைகளும் கருத்தில் உள்ளன.

இந்தியாவில் தடுப்பு முறைகள்

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் நாட்டுத் தந்தையாக கருதப்பட்ட மகாத்மா காந்தியின் அறிவுரைப்படி பல மாநிலங்களில் மது விலக்கு அமலாக்கப்பட்டது. ஏழ்மை மிகுந்த இந்தியாவில் குடும்பத்தலைவரின் குடிப்பழக்கம் குடும்பத்தின் உடல் மற்றும் மன நலனுக்கு கேடு விளைவிப்பதாலும் குறைந்த வருமானத்தின் பெரும்பங்கு குடிக்குச் செலவழிக்கப்படுவதாலும் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் மொத்த மதுவிலக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்ற போதும் இரண்டாண்டுகளில் இத்திருத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும் சில கட்டுப்பாடுகள்:
  • இந்தியாவில் மட்டுமே மது குடிக்க மிக உயர்ந்த வயது வரம்பு: 25 ஆண்டுகள்
  • மதுபானங்களை நேரடியாகவோ மறைமுகவோ விளம்பரப்படுத்துவது சட்ட விரோதமாகும்.
  • ஒலி/ ஒளி பரப்பு சட்டத்தின்படி குடிக்கும் காட்சிகளை காட்சிபடுத்துவது வயது வந்தவர்களுக்கானதாக வகைப்படுத்தப்படுகிறது.

மேலாண்மை

குடிப்பழக்கம் பல வகைகளில் வேறுபடுவதால், அதற்கிணங்க அதற்கான சிகிச்சைகளும் நோயின் வடிவத்திற்கு ஏற்றாற்போல் (antidipsotropic) அமைதல் வேண்டும். 'குடிப்பழக்கம் சிகிச்சையினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய்' என்று நினைப்பவர்கள் கையாளும் வழிமுறைகளும், அதனை 'ஒரு சமூக சீர்கேடு' என்று நினைத்து அதனைக் குணப்படுத்த நினைப்பவர்கள் கையாளும் வழிமுறைகளும் வேறுபட்டவையாகும்.
இருவிதத்திலும் சிகிச்சை முறைகள், குடிப்பதைக் குறைக்கும் அல்லது தடுக்கும் முறைகளை குவிமையமாக கொண்டதாகும். மேலும் அத்துடன் அவர்கள் திரும்பவும் குடிக்காமல் இருப்பதற்கு பயிற்சிகள் மற்றும் சமூக ஆதரவு அளித்து அவர்கள் மீண்டும் குடிப்பதை தடுப்பதற்கான முயற்சிகளும் இணைந்தவை. குடிப்பழக்கம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருப்பதால், ஒருவர் தொடர்ந்து குடிக்காமல் இருக்கவும், மீண்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்கவும், அதன் ஒவ்வொரு காரணங்களையும் அறிந்து கொண்டு, அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கவேண்டும். இது போன்ற ஒரு சிகிச்சை முறையில் முதலில் நச்சு நீக்கம் செய்து பின்னர் அதற்கான தாங்கு சிகிச்சை அளிப்பது, சுய உதவிக் குழுக்கள் வருகை புரிவது, மற்றும் மேம்படுத்தப்படும் புதிய வழிமுறைகளுடன் ஒத்துழைப்பது ஒரு எடுத்துக் காட்டாகும். குடிப்பழக்க பாதிப்பிற்கு சிகிச்சை வழங்கும் சமூகம், பொதுவாக தவிர்ப்பு-அடிப்படையிலான சுழியசகிப்புத்தன்மை கொண்ட அணுகு முறையையே விரும்புவார்கள்; இருந்தாலும், வேறு சிலர் தீய விளைவுகளைக் குறைக்கும் அணுகுமுறையை பின்பற்றலாம்.

நச்சு முறித்தல்

மது சார்ந்த குடிப்பழக்க நச்சுமுறித்தல் அல்லது நச்சகற்றல் (டிடோக்ஸ்) என்பது உடனடியாக குடிப்பழக்கத்தை நிறுத்தி, அதனுடன் பென்ஸோடியாஸெபைன்கள் அடங்கிய மாற்று மருந்துகளை அளிப்பதாகும். இந்த மாற்று மருந்துகள் மது அருந்தச்செய்வது போலவே மனத்தோற்றங்களை அளிப்பதால், மது அருந்துவதில் இருந்து விலகுவதற்கு ஏதுவாக இருக்கும். குறைவான மற்றும் மிதமாக விலகும் அறிகுறிகள் கொண்டவர்களை இந்த முறையில் புறநோயர்களாக சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்யலாம். கடுமையான ஒதுங்கல் இணைப்போக்கு மற்றும் கடுமையாக ஒன்றிற்கும் மேலான நோய்களுடன் அவதிப்படும் சூழ் இடர் கொண்டவர்கள் பொதுவாக மருத்துவ மனையிலேயே சிகிச்சையை எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். இருந்தாலும், நச்சுத்தன்மையை நீக்குவதால் மட்டும், குடிப்பற்று குணமடையாது. அதனால் நச்சகற்றலுக்குப் பிறகு, மது சார்புள்ளமை நிலைமையிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறைகளை உடனுக்குடன் பின்பற்ற வேண்டும், மேலும் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் சூழ் இடரில் இருந்து வெளிக்கொணர வேண்டும்

குழு மருத்துவம் மற்றும் உளவழி மருத்துவம்



பெயரில்லா குடிகாரர்கள் (அல்கோஹோலிக்ஸ் அனோனிமஸ்) அமைப்பு நடத்தும் வட்டார சேவை மையம்.
நச்சு முறித்தல் சிகிச்சைக்குப் பிறகு, குடி போதை சார்ந்த மன நிலை பிரச்சினைகளை குணப்படுத்த பல வகைப்பட்ட குழு மருத்துவம் அல்லது உளவழி மருத்துவம் சார்ந்த சிக்கிச்சை அளிக்கலாம் மற்றும் மீண்டும் சீர்கேடடைவதைத் தடுக்கும் ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளலாம். ஒருவருக்கொருவர்-உதவி புரிந்து குழு-கலந்துரை வழங்கும் அணுகுமுறை மிகவும் பொதுவான வழிமுறையாகும். மேலும் மது அருந்துவோர் தமது சுயநினைவுடன் பணிபுரிய இம்முறை உதவுகிறது.[14][15]

பங்கிடுதல் மற்றும் மட்டுறுத்தல்

மட்டுறுத்தல் மேலாண்மை மற்றும் விவேகமாக குடிப்பது (ட்ரின்க்வைஸ் ) போன்ற பிறருடன் இணைந்த மட்டுறுத்தல் திட்டங்களில் குடிப்பதை முழுமையாக தவிர்க்கும் தேவை இல்லை. பல குடிகாரர்கள் அவர்கள் குடிக்கும் அளவை கட்டுப்படுத்த இயலாமல் தவித்தாலும், சிலர் மிதமாக அருந்தும் பழக்கத்திற்கு திரும்புகின்றனர். அமெரிக்காவில் 2002 ஆம் ஆண்டில் நேஷனல் இன்ஸ்டிடுட் ஓன் அல்கஹோல் அப்யுஸ் அண்ட் அல்கோஹோளிசம் (NIAAA) நடத்திய ஆய்வில், ஒரு வருடத்திற்கும் மேல் மதுவை சார்ந்து குடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் 17.7 விழுக்காடு குடிப்பவர்கள் திரும்பவும் மிதமான அளவில் குடிக்க ஆரம்பித்தார்கள். இருந்தாலும், முதலில் இக்குழுவினரில் மது சார்ந்தமைக்கான அறிகுறிகள் தென்படவில்லை. இதைத் தொடர்ந்து அதே குழுவினரைச் சார்ந்த 2001-2002 ஆண்டு நடைபெற்ற ஆய்வில், தொடர்ந்து யார் யார் மீண்டும் குடிப்பழக்கத்திற்கு திரும்பினார்கள் என்று 2004-2005 ஆண்டில் பரிசோதித்தது. இந்த ஆய்வில், மது மயக்கத்திற்கு ஆளானவர்களை மீண்டும் மீட்பதற்கு, மதுவைத் தவிர்க்கும் முறையே சால சிறந்தது என்று கண்டறிந்தது இவ்விரு குழுவினரையும் நீண்ட நாட்களுடன் கூடிய (60 வருடம்) பின் தொடரும் ஆய்வில் கண்டறிந்தது "கட்டுப்பாட்டுடன்கூடிய குடிப்பழக்கம் பத்து வருடங்களுக்கு மேல் நீடிக்கவில்லை மேலும் இதற்கிடையில் அவர்கள் மீண்டும் குடிக்கும் பழக்கத்திற்கோ அல்லது தவிர்க்கும் முறைக்கோ திரும்பி வந்தார்கள்" என்பதே.
இருமுக அடிமைத்தனம் குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் இதர உள நிலைமாற்றி மருந்துகளுக்கான அடிமைத்தனத்தில் இருந்தும் விடுபடவேண்டும். மது சார்புள்ளமை பாதிப்பினால் பொதுவாக பென்ஸோடியாஸெபைன் ஆதிக்கமும் ஏற்படுகிறது. ஆய்வுகளில் 10 - 20 விழுக்காடு மது மயக்கம் கொண்ட மனிதர்கள் பென்ஸோடியாஸெபைன்கள் பயன்பாடு சார்ந்த பிரச்சினைகளையும் தவிர்க்க வேண்டும் என்று தெரிகிறது. மதுவே ஒரு வகைப்பட்ட உறக்க ஊக்கி மருந்தாகும், மேலும் அது அதைப்போன்ற குறுக்கு தூக்க ஊக்கிகளையும் சகிக்கும் தன்மையுடையதாகும்.எ.கா: பார்பிசுரிக் அமில உப்புக்கள், பென்ஸோடியாஸெபைன்கள் மற்றும் பென்ஸோடியாஸெபைன்கள் சாராதவை. குடிகாரர்கள் பொதுவாக சால்பிதேம் மற்றும் சாபிக்லோன், அபின் கலந்த மருந்துகள் மற்றும் சட்ட விரோதமான மருந்துகள் போன்ற மருந்துகளுக்கும் அடிமையாகும். தூக்க ஊக்கி மருந்துகளை சார்ந்திருப்பது மற்றும் பின்வலிப்பது, எ.கா.பென்ஸோடியாஸெபைன் பின்வலிப்பு மது சார்புடையது போலவே காணப்படும், அது கடுமையானதும், உளப்பிணி மற்றும் வலிப்புகள் போன்ற இடர்களாலும் துன்புற வேண்டும். கடுமையான பென்ஸோடியாஸெபைன் சார்புத்தன்மையை மீட்டு வருவதற்கு, பென்ஸோடியாஸெபைன் பின்வாங்குதல் இணைப்போக்கு மற்றும் அதனால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். பென்ஸோடியாஸெபைன்கள் மதுவிற்கான ஏக்கத்தை மேலும் தூண்டிவிடும். மேலும் பென்ஸோடியாஸெபைன்கள் குடிகாரர்களின் மது குடிக்கும் அளவையும் கூட்டி விடும்.

கருத்துகள் இல்லை: