ஆதரவாளர்கள்

வியாழன், 13 ஜூன், 2013

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகரிக்கும் சாலை விபத்துகள்

தமிழகத்தில் மதுவை ஒழிக்க வேண்டும் அரசு மதுக் கடைகளை நடத்தக் கூடாது என்ற போராட்டங்கள் நடந்து வருவது மக்கள் விழிப்புணர்வைக் காட்டுகின்றது. மதுவே நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணமாய் அமைந்துவிடுகின்றது. குற்றம் செய்தவன் குடிபோதையில் செய்துவிட்டான் என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற மனநிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்பது வெட்கக் கேடானது. காவல் துறையினரே குடிகாரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் என்னவென்று சொல்வது?


கடந்த  சில தினங்களுக்கு முன் திருவொற்றியூரில் நடந்த உண்மைச் சம்பவம் ;

மக்கள் நடமாட்டம் மிகுந்த திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கடைகள் நிறைந்த   மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையின் திருமண மண்டப வாயில் முன்பாக ஒருவர் ஆடை கலைந்த நிலையில் படுத்துக்கிடக்கின்றார். சிலர் எழுப்பியும்  அவர் எழுந்திருக்கவில்லை. அப்பொழுது அங்கிருந்த காவலாளி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கின்றார்.

 சற்று நேரத்தில் தமிழ்நாடு காவல் துறைசார்ந்த இரண்டு இளம் காவலர்கள் அங்கு வந்தனர். அந்த போதை நபரை எழுப்பிப் பார்த்தனர் எழுந்திருக்கவில்லை கையில் இருந்த பிரம்பால் இரண்டு அடி அடித்ததும் அந்த நபர் பொறுமையாக எழுந்து உட்கார்ந்து கொண்டு பாக்கெட்டில் இருந்த அடையாள அட்டையைக் காண்பித்து அந்த காவலர்களிடம் எப்படி என்னை அடிக்கலாம் என்று கேள்வி கேட்டதுடன் ஒருமையில் அந்தக் காவலர்களைப் எழுத முடியாத வார்த்தைகளால் திட்ட  ஆரம்பித்துவிட்டார். நானும் இதைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன் உண்மையா குடிகாரன் பேசுவது மாதிரி இல்லாம தெளிவா பேசுகின்றார் இவ்வளவு தெளிவா இருப்பவர் எழுப்பியது எழுந்து இருக்கலாமே என்மனதில் எண்ணிக்கொண்டு காவலர்களைப் பார்க்கின்றேன். அந்த காவலர்கள் எதோ புளியைக் கண்டு பம்முவதைப் போல் பயப்படுகின்றார்கள். எந்த எதிர்ப்பையும் அந்தக் குடிகாரனிடம் காட்டவில்லை.

ஒரு காவலர் அருகில் நின்று இருந்தவர்களிடம் ஏங்க குடிகாரன் கிடந்தால் தண்ணிய ஊத்தி விட்டு இருக்கலாமே எங்கள ஏங்க கூப்பிட்டீங்க இதெல்லாம் எங்களுக்கு தேவையா என்று புகார் செய்த காவலாளியை கேள்விகேட்டு திட்ட ஆரபித்தார். நான் உடனே குறுக்கிட்டு உங்களையே இப்படி திட்டுகின்றான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் சொல்வதுபோன்று இவர் செய்திருந்தால் குடிகாரன் இவரை அடித்தே இருப்பான் அப்படி அடித்திருந்தால் நீங்கள் தான் வரவேண்டியதிருக்கும் அந்தக் குடிகாரன் உங்களை அவமானகரமான வார்த்தைகளால் திட்டுகின்றான் அவனை உங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க துணிவில்லை பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை தண்ணி ஊத்த வேண்டியது தானே என்று இங்கே இவர்களிடம் பேசுவது நியாயமில்லை என்றேன். சட்டப்படி பொது இடத்தில் இப்படி நடப்பதற்காக அவன் மீது நடவடிக்கை எடுங்கள் என்றேன் அதற்கு அந்த காவலர் அவர் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராக இருக்கின்றார் சார்.

 ஓஹோ அதுதான் அந்த அடையாள அட்டையா! அதைக் கண்டுதான் இந்தக் காவலர்கள் அடங்கிபோனார்களா அப்பொழுது என் பார்வையை அந்தக் குடிகாரர் பக்கமாக திருப்பினேன் அப்போதும் அவர் அசிங்கமாக திட்டிக்கொண்டு மெதுவாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

இப்படி ஒரு ஓட்டுனரை நம்பி பேருந்து பயணிகள். சும்மா கிடந்தவனையே எழுப்பமுடியாத நடவடிக்கை எடுக்க திராணியற்ற தமிழ் நாடு காவல்துறை இந்த மாதிரியான ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியாதால் ஏற்ப்பட்டுள்ள விபத்துக்கள் பற்றிய தினகரன் நாளிதழ் கட்டுரையை அப்படியே கொடுத்துள்ளேன் படித்து பாருங்கள்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. தினமும் 43 பேர் விபத்தில் பலியாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. 2011ல் 15,422 பேர் பலியாகினர். 2012ல் 67,980 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 15,900 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் விபத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியும்.

மத்திய அரசு பராமரிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் 22,168 விபத்துகளும், மாநில அரசு பராமரிக்கும் நெடுஞ்சாலைகளில் 20,920 விபத்துகளும், மாவட்ட சாலைகளில் 15,020 விபத்துகளும், கிராம சாலைகளில் 7765 விபத்துகளும் நடந்துள்ளன. சாலை யில் நடந்து செல்பவர்கள் மூலம் 1747 விபத்துகள் மட்டுமே நடந்துள்ளன. கடந்த ஆண்டு நடந்த 91 சதவீத விபத்துக்கு டிரைவர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது.


01:16:21 Friday 2013-06-14
இதிலிருந்து சாலை விபத்துகளுக்கு வாகனத்தை ஓட்டுபவர்களே அதிகம் காரணம் என்று தெரியவந்துள்ளது. இரவு நேரங்களில் டிரைவர்கள் பெரும்பாலும் மது அருந்தியே ஓட்டுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 600க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன. அவற்றை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பல கடைகள் அகற்றப்படவில்லை. சாலை விபத்துகளுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே காரணம் என்று நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

அதற்குபிறகும், போதையில் ஓட்டுபவர்கள் மீது போலீசார் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் கடந்த மாதம், போதையில் நள்ளிரவில் வேகமாக பென்ஸ் காரில் வந்த தொழில் அதிபர் புருஷோத்தமனின் மகன் சாஜிஸ், போலீஸ் ரோந்து கார், ஆட்டோ, பைக் மீது மோதியதோடு, பஸ் நிறுத்தத்தில் படுத்திருந்த சிறுவன், சிறுமி உட்பட 4 பேர் மீது மோதி பெரும்விபத்தை ஏற்படுத்தினார். இதில் சிறுவன் உயிரிழந்தான்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா, போலீஸ் கமிஷனர் ஜார்ஜை அழைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். முதல்வர் தலையிட்ட பிறகே, சாஜிஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றத்தை மறைத்ததாக அவரது தந்தை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொச்சி விமானநிலையத்தில் சாஜிஸ் நேற்று கைது செய்யப்பட்டார். முதல்வர், கமிஷனர் தலையிடாவிட்டால், தொழில் அதிபரின் கார் டிரைவர் மீது மட்டும் சாதாரண ஜாமீனில் வெளிவரக் கூடிய 304(ஏ) பிரிவில் வழக்குப்பதிவு செய்து, விட்டிருப்பார்கள். பெரிய அளவில் பணம் கைமாறியிருக் கும். போலீசார் நினைத் தால், பெரிய வழக்கை சிறிய வழக்காக்கவும் குற்றவாளியை மாற்றிவிடவும் முடியும் என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.

2 முறைக்கு மேல் போதையில் வாகனம் ஓட்டுபவர்களது உரிமத்தை ரத்து செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், போலீசார் அதை சரியாக பயன்படுத்துவதில்லை. மற்ற மாநிலங்களில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் மீது கூட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளது. இதனால்  தான்அங்கு விபத்துகள் குறைந்துள்ளன.

தமிழகத்தில் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 2012ல் 2554 பேரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 235 பேரின் உரிமம் மட்டுமே நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துக்கு கூட 304(ஏ) என்ற பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம், அதிகபட்சம் 2 ஆண்டு சிறை தண்டனையே விதிக்கமுடியும். குற்றவாளியை போலீஸ் நிலையத்திலேயே ஜாமீனில் விடுவிக்கலாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்புகளை ஏற்படுத்துபவர்கள் மீது 304(2) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால்தான் குற்றவாளியால் ஜாமீனில் வர முடியாது. குறைந்தது 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இது கொலை வழக்கிற்கு இணையானது. இனியாவது இப்பிரிவில் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இப்போதுதான் சரியான நேரம். சாஜிஸ் வழக்குக்கு பிறகாவது போலீசார் விழித்துக் கொண்டு சட்டத்தை கடுமையாக பின்பற்றினால் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் பெருமளவில் குறைக்க முடியும் என்று சட்ட வல்லுநர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

பிரபலங்கள் மீது நடவடிக்கை

அரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதி மகள் ஹரிபிரியா ஓட்டிய கார் மோதி  2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். நடிகர் சல்மான்கான் கார் மோதி சைக்கிளில் சென்றவர் சிக்கினார். பஞ்சாப் முன்னாள் முதல்வரின் பேரன் குர்ஹிரத் சிங் என்பவர் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல, ஐ.ஏ.எஸ் அதிகாரி பஜாஜ் என்பவர் மகன் ரஞ்சித் பஜாஜ் ஓட்டிய கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்துகளில் எல்லாம் போலீசார் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்தனர். நமது நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டில் கூட பிரபலமானவர்கள் விபத்துகளை ஏற்படுத்தினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பிரபல பாப் பாடகர் ஆலன் மைக்கேல் என்பவர் மகள் அலி மைக்கேல் ஓட்டிய காரில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர் கைது செய்யப்பட்டார்.

10 நாளில் 1,855 வழக்கு

கடந்த ஜனவரி முதல் கடந்த 10ம் தேதி வரை மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 26,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 10 நாட்களில் மட்டும் 1,855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மது அருந்தி விட்டு கார் ஓட்டியதாக 478 வழக்கும், இரு சக்கர வாகனத்தில் சென்றதாக 1226 வழக்கும் மற்ற வாகனங்களில் சென்றதாக 151 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆண்டு    விபத்து     பலி
2006    55,145    11,009
2007    59,140    12,036
2008    60,409    12,784
2009    60,794    13,746
2010    64,996    15,409
2011    65,873    15,422
2012    67,757    16,175


4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குடிக்கு எப்போது ஒரு சாவு வரப் போகுதோ...?

கவியாழி சொன்னது…

காரணம் ? இரவு நேரங்களில் டிரைவர்கள் பெரும்பாலும் மது அருந்தியே ஓட்டுகின்றனர்

ராஜி சொன்னது…

நல்லதொரு பகிர்வு.., ஆனா, திருந்தனுமே! வேலியே பயிரை மேய்ந்த கதையா காவலரே குடித்துவிட்டு ரோட்டில் கிடந்தாரா?! பலே! பலே!

VOICE OF INDIAN சொன்னது…

ஆதங்கம் உங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களும்தான் ஆளும் கட்சி அரசியல் வாதிகள் தவிர ஒருவர் விவாதத்தின் போது அரசு மது விற்பனை செய்யலாம் மக்கள் குடிக்காமல் இருக்க வேண்டும் சுய கட்டுப்பாடு வேண்டும் உங்களுக்கு அந்த கட்டுப்பாடு இருப்பதால் நீங்கள் குடிப்பதில்லையே என்று எதிர் விவாதம் செய்தவரையே மடக்கும் அளவுக்கு பேசிவிட்டு மேலும் ஒரு முக்கியமான கருத்தை வைக்கின்றார் குடிப்பது தவறில்லை குடித்துவிட்டு வண்டியை ஓட்டுவது தான் தவறு என்று குடித்தபிறகு அவன் கீரோ போன்று நடந்துகொள்வான் என்றும் அவரே சொல்கின்றார் ஏனென்றால் அவர் அ தி மு க நபர் இப்படி கேடுகட்ட நியாயத்திற்கு புறம்பாக பேசி அதையும் சரியென்று வாதம் செய்யும் துணிச்சலைக் கொடுத்த மக்கள் அதை திரும்பப் பெரும் காலம் நெருங்குகின்றது

விரைவில் நல்லதே நடக்கும் தனபாலன் சார் நடக்கவில்லை என்றால் நாம் முயற்ச்சித்தால் நிச்சயம் மது ஒழிப்பு சாத்தியமே