ஆதரவாளர்கள்

திங்கள், 3 மார்ச், 2014

உரிமை மறுப்பு வன்முறைக்கு "அ" வாம் - அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உள்ள உரிமை


ஊடக நலன் காக்க விருப்பு வெறுப்பின்றி ஒன்றாவோம்
அமைப்புகள் வெவ்வேறாயினும் நோக்கம் ஒன்றே 

சவுக்கு இணைய தளம் முடக்கம் செய்ய உத்தரவு என்பது மோசமான  முன் உதாரணம் இது நாளை நம்மையும் தாக்கும் ஆயுதமாக மாறிடாமல் தடுத்திட வேண்டியது ஒவ்வொரு ஊடக நண்பர்களின் கடமை 


நேர்மையான ஊடகங்களின் குரல்வளையை நெருக்குவதும் ஒடுக்குவதும் ஆளும் வர்கத்தின் அடிவருடியாய் ஊடக தர்மத்தை மீறி செயல்பட ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் பாரதத்தை தாங்கும் நான்கு தூண்களில்  நான்காவது தூணாம் ஊடகதுறைக்கு வந்த கேடு என்று கண்ணீர் சிந்திய சமூக ஆர்வலர்களுக்கு சவுக்கு மாதிரியான ஊடகம் தான் ஒரே ஆறுதல் 


எந்த ஊடகமும் செய்யத் துணியாத வெளியிடத் தயங்கும் செய்திகளை எத்தகைய மனிதரானாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர் செய்யும் தவறை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி அவர்களின் உண்மை முகத்தை உலகுக்கு காட்டுவதில் சவுக்குக்கு நிகர் சவுக்குதான் 

சவுக்குக்கு எதிராக இணைய தளத்தை முடக்க இந்திய நீதிமன்றங்களால் இயலாது இந்திய அரசாங்கத்தினாலும் இயலாது இது உலக அளவிலான ஒப்பந்த அடிப்படை இனிய சேவையாகும் 

அப்படியே நடந்தாலும் இன்றைய வேகத்தில் ஒரு நொடியில் களமும் தளமும் செய்வது சாத்தியமே 

அப்படி நடந்தால் அது ஊடகத் துறைக்கே தீராத களங்கம் விளைவிக்கும் கருப்பு தேசமாகி நாடும் வீடும் கெடும் எந்த ஊடகமும் உண்மையை எழுத இயலாத நிலை வரும் 

ஊடகத் துறைக்கு வருபவர்கள் பணத்திற்காக மட்டும் வருவதில்லை காசுமட்டும் குறிக்கோள் என்றால் இன்னல்கள் தாங்கி நடத்திடும் அவசியம் இல்லை 

இன்று உலகத்தில் உள்ள எல்லாத் தொழிலையும் ஒரு ஊடகவியலாளர் செய்துவிட முடியும் ஆனால் யாராலும் எளிதில் செய்ய முடியாத ஒரு தொழில் ஊடகம் தான் . 

நாட்டில் உள்ள அவலங்களை களைய வேட்கையுடன் புறப்படும் பாரதியார்கள் இவர்கள். சுதந்திரத்திற்காக பாரதி எழுதினான் இவர்கள் அராஜகத்திற்கெதிரான அடக்குமுறைக்கு எதிரான ஊழலுக்கு சுதந்திரம் கேட்டு எழுதுகின்றார்கள்.  

தவறு செய்யாதீர்கள் தவறு செய்தால் தட்டிக்கேட்க நாங்கள் இருக்கின்றோம் என்று அனைத்து அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் கட்சி பேதமின்றி விருப்பு வெறுப்பின்றி செயல்படும் சவுக்கு இணைய தளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவிடுவது நீதியையே கேலிக்கூத்தாக்கும் செயல் ஆகும்.

நீதிமன்றம் மக்களின் நலன் காக்க ஏற்ப்படுத்தப்பட்ட அமைப்பா அல்லது மக்களை பயமுறுத்த அல்லது ஊழல்வாதிகளைக் காக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பா என்ற கேள்வி இங்கே எழுகின்றது 

சுதந்திர தேசத்தில் பேச்சுரிமை எழுத்துரிமை என்று எண்ணற்ற உரிமைகள் இருக்க ஊடகவியலாளர்களின் எழுத்துரிமையை பறிக்கும் உத்தரவை ஒரு நீதிபதியே வெளியிடுகின்றார் என்றால் இது சுதந்திர நாடா என்ற கேள்வியும் எழுகிறது 
ஊடக நண்பர்களே இது முடியுமானால் இந்த உத்தரவு செல்லும் என்றால் இந்த உத்தரவு காரணமாக சவுக்கு இணைய தளம் முடக்கப்படுவது சாத்தியமானால் இனி இந்த நாட்டில் ஊடகம் நடத்துவது அரசியல் ரௌடிகளால் மட்டுமே முடியும் இது சவுக்குக்கு வந்த பிரச்சனை அல்ல அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உள்ள உரிமைப் பிரச்சனை இதற்ககான போராட்டம் தொடங்குவோம் உரிமையை மீட்போம்

சவுக்கு ஒரு தனி மனிதனின் ஊடகம் அல்ல அது கோடான கோடி  மக்களின் மனசாட்சி 


ஊடக சுதந்திரம் என் பிறப்புரிமை என் தாய் தடுத்திடினும் விடேன்  என்று வீறுகொண்டு எழுவோம் வெல்வோம் வாரீர் வாரீர் 

ஊடக நலன் காக்க விருப்பு வெறுப்பின்றி ஒன்றாவோம்
அமைப்புகள் வெவ்வேறாயினும் நோக்கம் ஒன்றே  

உரிமை மறுப்பே வன்முறை தீவிரவாதம் வளரக்  காரணம் 



- இந்தியன் குரல் 

கருத்துகள் இல்லை: